Thursday, 27 February 2014

கரிசல் மண்ணில் ஒரு காவியம்14

அத்தியாயம்14

கமலாவின் வீடு இன்று அமைதியாக இருந்தது,ஆச்சி இல்லாத வீட்டில் ஒரு பேச்சுப் பேசவும் ஆள் இல்லை.இன்று அந்த மௌனம் கலைகிறது.ஆம்!ஆச்சிக்கு பரிபூரணமாகக் குணமாகிவிட்டது.இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறாள்.அவளை ஆராத்தி எடுத்து வரவேற்க ஏற்பாடுகள் சத்தமில்லாமல் வேண்டா விருப்பாக கமலாவால் ஏனோதானோவென தயாராகின்றன.

“இவளுக்கு இது ஒண்ணுதான் கேடு”எனத் தாம்பூலத் தட்டை டமாலெனப் போட்டு தன் கோபத்தை வெளிக்காட்டுகிறாள்.நல்ல வேளை வீட்டில் யாருமில்லை.

“இன்னிக்குவரை வீடு அமைதியா இருந்தது.இப்போ அந்தக் கிழவி வாறா.இன்னும் என்ன கூத்தாகுமோ தெரியல.இந்தப் பய கல்லப் போட்டதுதாங் போட்டானே ஒரே போடா போட்டுருக்கக் கூடாது!சனியன் ஒரே அடியா ஒழிஞ்சி தொலஞ்சிருக்குமில்ல.பயந்தாங்கொள்ளிப் பாவிப்பய.இவங் எல்லாம் ஒரு ஆம்பளயின்னு அலையிறானே.ஏங் உசுர எடுக்குறதுக்குன்னு வாறா பாரு சண்டாளக் கிழவி”எனத் தனக்குள்ளேயே பேசி தனக்குத்தானே அலுத்துக்கொள்கிறாள் கமலா!

வாசலில் வாடகைக் கார் வந்து நின்றது.கார் கதவைத்திறந்து கமலாவின் அப்பா முதலில் இறங்கி,’அம்மா மெதுவா மொள்ளமா இறங்கும்மா!ஏண்டி நீதாங் கொஞ்சம் உதவி செய்யெங்”என கமலாவின் அப்பா சொன்னதும் “சரிங்க!அத்த வாங்க மெதுவா கால வச்சு மெல்ல இறங்குங்க”எனக்கூறிகொண்டே ஆச்சியை கீழே இறக்க முயற்சிக்கிறாள் கமாலாவின் தாயார்.

“விடுடி என்ன என்னய என்ன காலில்லாத முடமுன்னு நினச்சியா?ன்னு சக்குன்னு குதித்தாள் கிழவி.அவ்வளவுதான் அய்யோ அம்மான்னு அப்படியே காலைப் பிடித்துக்கொண்டு வலியால் கதறினாள் ஆச்சி.

“ஏம்மா உனக்குக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?அவதாங் உன்னய இறக்கிவிடுவால்ல அதுக்குள்ள உனக்கு என்ன வீம்பு?பழைய படியும் கால ஒடச்சிக்கப்போரியா?வயசுதாங் ஆச்சே ஒழியே கொஞ்சங்கூடப் புத்தியே இல்ல....புடிறின்னு மனவியின் உதவியோடு ஆச்சியை மெதுவாக கைத்தாங்கலாக வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டு போவதற்குமுன்”ஏம்மா கமலா ஆச்சிக்கு ஆராத்தி எடுத்து சூடம் கொளுத்தி சுத்திப்போட்டு அந்தத் தட்டுல உள்ள தண்ணிய தெருவுல கொட்டும்மா”எனக் கூறியவுடன் கமலா முணங்கிக்கொண்டே “சரிப்பா” சூடம் கொளுத்தி ஆராத்தி எடுத்து தட்டுத்தண்ணீரை தெருவில் கொட்டினாள்.ஆச்சியை மெதுவாக அரவணைத்து வீட்டுக்குள் கூட்டிப் போய் அப்படியே கட்டிலில் உட்கார வைத்தனர்.

“ஏங் கெழவி உனக்கென்ன இன்னும் கொமறின்னு நெனப்போ!உனக்கு இன்னும் அந்த லொள்ளு போகலயே!இவா பெரிய வீராங்கன வீரலட்சுமி!வீரத்த காட்டுரீகளோ!கெழவி!”என ஆச்சியை கிண்டல் செய்தாள் கமலா.

“ஏண்டி சொல்லமாட்ட சின்னச்சிறிக்கி!எல்லாம் ஒன்னால வந்த வெனதாண்டி!நீ பேசாதடி!”என பாட்டி பழயதைக்க்கிளரினாள்.

“அய்யய்யோ வந்ததும் ஆரம்பிச்சிட்டியா!ஏம்மா கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?
என கமலாவின் அப்பா தன் தாயாரை பழைய நினைவில் இருந்து பேச்சை மாற்ற அணை போட்டார்.

“கெழவிக்கு இன்னும் அந்தத் திமிறு போயிருக்கா பாரு கூனி! என கமலா தன் மனதில் எண்ணி வசை பாடினாள்.

“சரி சரி........கமலா ஆச்சிக்கு ஏதாவது குடிக்கக் குடும்மா!’’............அப்பா சொன்னதும் “ஹூம் .......”கமலா வெடுக்கென முகத்த ஒரு சுண்டு சுண்டி விறைப்பாக உள்ளே போனாள்.இதை ஆச்சி கவனிக்கிறாள் “ஹாங்............. அடியே!நீ என்ன நெனக்கிரேன்னு எனக்குத் தெரியுண்டி இந்தக் கெழவி சாகாம திரும்பி வந்துட்டாளேன்னுதான நெனக்கிற”..................ன்னு ஆச்சி தன் மனதுக்குள் பேசுகிறாள்.

அதற்குள் ஆச்சி வீட்டுக்குத் திரும்பி வந்த விஷயம் ஊருக்குத் தெரிய வருகிறது.ஒவ்வொருவராக உறவினர்கள் நலம் விசாரிப்பதற்காக வரத்தொடங்கி விட்டனர்.இதுதான் கிராமத்து மனம்.ஊரில் ஒருவீட்டில் நல்லது பொல்லது எது நடந்தாலும் வாழ்த்தவோ அல்லது ஆறுதல் கூறித் தேற்றவோ ஊரே ஒன்று கூடி வந்துவிடும்.ஆனால் நகரத்து நாகரிகம் வித்தியாசமானது.பக்கத்து வீட்டில் இழவு விழுந்தால் கூட எட்டிப்பார்க்க மாட்டார்கள்.ஒருவுக்கொருவர் பெயர் கூடத் தெரிந்துகொள்ள முயல மாட்டார்கள். கிராமம் என்பது ஒரு குடும்பம் போன்றது.ஆனால் நகரம்.அனைவருமே அனாதைகளாகவே வாழ்கிறார்கள்.அதனால்தான் பட்டப்பகலில் கூட தெருமேல் இருக்கும் வீட்டில் கூட திருடு பயம் இல்லாமல்.நடை பெறுகிறது,அடுத்தவர் வீட்டை எவரோ ஒருவர் புல்டோசர் வைத்து இடித்தால் கூட என்னென்று கேட்க மாட்டார்கள்.தெரிந்துகொள்ள முயற்சிக்கவும் மாட்டார்கள்.நகர வாழ்க்கை என்பது தனித் தனிக் குடும்ப வாழ்க்கை.ஒருவருக்கொருவர் ஒட்டாமலே வாழ்வார்கள்.ஆனால் கிராமம் ஒரு கூட்டுக்குடும்பம்போல் கூட்டுவாழ்க்கை வாழ்கிறார்கள்.இங்கு நிசமான மனித வாழ்க்கை.

ஆச்சியை நலம் விசாரிக்க கிராம சொந்தம் பந்தங்கள்.அக்கம் பக்கம் அறிந்தவர் தெரிந்தவர் வேண்டியவர் வேண்டாதவர் வரவும் போகவுமாக இருந்தார்கள்.வெறிச்சோடிக்கிடந்த வீடு ஒரே திருவிழாக்கோலமாக இருந்தது.அப்போது ராஜாவின் அம்மாவும் வாசலில் வந்து உள்ளே வராமல் தயங்கித் தயங்கி ஆச்சியை கவலை தோய்ந்த குற்ற உணர்வோடு வாடிய முகத்தோடு பார்த்து நின்றாள்.ஆச்சி அவளைக்கண்டு கொள்ளவே இல்லை.ஆனால் கமாலாவின் அப்பா பார்த்து எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் ,”ஏம்மா வெளியில நிக்கிற உள்ள வாம்மா!நீ என்ன செய்வ பாவம்.”எனக் கனிவோடு கூறினார்.ஆனால் ஆச்சியின் பார்வையில் நடந்ததை மறந்ததாகவோ அவள் தன் தவறை உணர்ந்ததாகவோ இல்லை.அவள் பார்வையில் வெறுப்புதான் தெரிந்தது.அதனால் ராஜாவின் தாயாரின் கால்கள் உள்ளே நுழையத் துணியவில்லை.

“பரவாயில்லை அண்ணாச்சி!அதாங் ஆச்சியைப் பாதுட்டேங்ல்ல.நாங் வாரேங் அண்ணாச்சி எனக்கூறி தன் இரு கைகள் கூப்பி வணங்கி தன் கண்களைத் தன் முந்தானையால் துடைத்துக்கொண்டு தலைதாழ்ந்து நகர்ந்தாள்.அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளே நுழைகிறார்.



(தொடரும்)
கொ.பெ.பி.அய்யா.







Sunday, 23 February 2014

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.13

அத்தியாயம் 13.

ராசா இன்று மிகவும் உற்சாகமாக இருந்தான்.ஒரே பாட்டும் ஆட்டமுமாக மிகவும் ஆனந்தமாக அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக ஒரு இடத்தில் நிற்காமல் ஓடி ஆடி கொண்டாட்டமாக காணப்பட்டான்.இதைக்கண்ட அவன் தாய்,”என்னாச்சு இவனுக்கு?என்னைக்கும் இல்லாத பொங்கம் இன்னைக்கு என்ன இவனுக்கு?”என எண்ணிய அவள் “டேய் ராசா என்னடா உனக்கு?இன்னிக்கு இவ்வளவு சந்தோசமா இருக்க? என்னடா சங்கதி?” எனக் கேட்டாள்.

“அப்படியா?அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.அடுத்த வாரம் பரிச்ச வருதுல்ல அதான்.வேற ஒண்ணுமில்லம்மா.”எனச்சமாளித்தான்.டேய்,......பரிச்சயின்னா பயந்தானடா வரும்.சந்தோசம் எப்படி வரும்?
‘டேய் பெத்தவளுக்கு தெரியாதா புள்ளயோட அருமை.எல்லாம் எனக்குத் தெரியுண்டா.உள்ளதச்சொல்லு. பரிச்சயின்னா எல்லாருக்கும் படபடப்புதான்  வரும்.நீ என்னமோ புதுசா சொல்லுற.உண்மையச்சொல்லு.வேறென்னமோ இருக்கு.”
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லயே!.என்னைக்கும் போலதான் இன்னைக்கும். ஏம்மா அப்படிக்கேக்குற?”என நெளிந்தான்.
“டேய் தெரியுண்டா மவனே!சும்மா சொல்லு. கமாலாவப் பாத்தியாக்கும்.?”என அவளும் ஆமோதிப்பதுபோல் போட்டு வாங்கினாள்.

“அது......அது ......அது வந்து.........என சொல்ல இழுத்தவன்.அப்புறம் தயங்கியவனாய் “அதெல்லாம் இல்லயே......என்ன நீ சும்மா சும்மா நோண்டி நோண்டி கேள்வி கேக்குற.நாந்தாங் ஒண்ணும் இல்லேங்கிறல்ல.அப்புறம் சும்மா நொய் நொய்னுக்கிட்டு:”எனத் தாயிடம் உண்மையை மறைக்க முயன்றான்.

“இல்ல எங்கிட்ட எதையோ மறைக்கிற.நீ எத எங்கிட்ட மறைக்கனுமன்னு நினைக்கிறியோ அது எனக்கு புடிக்காத விசயம்ன்னு ஒளிக்கிற..........டேய் நீ வளர்றதப் பாத்துப் பாத்து பெருமைப் படுறேங்.ஆனா அதே நேரத்துல எனக்குப் பயமாவும் இருக்கு,உனக்கு அப்பா இல்லேங்கிற கொற தெரியக்கூடாதுன்னு செல்லமா வளத்துட்டேங். நாளக்கி யாரும் உன்னப்பாத்து “நீ என்னதாங் இருந்தாலும் பொம்பள வளத்த புள்ளதான............அறுதலி (தாலி அறுத்தவள்) வளத்த புள்ளதான.அதாங் அடங்காம அலையுறான்னு ஊர்ல உள்ளவங்க கேவலமா பேசியிறக்  கூடாதேன்னு உன்னப் பொத்தி பொத்தி வளக்குறேங்.ஏங் நெனப்புல மண்ணள்ளிப் போட்டுருவியோன்னு எனக்குப் பயமா இருக்கு.”எனத் தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தாள்.

“அம்மா ஏம்மா அழுகுற.அப்படியெல்லாம் உன்ன அசிங்கப்படுத்துற மாதிரி நடக்க மாட்டேம்மா.என்ன நம்பும்மா”எனத் தாயை தன்னிடம் தவறில்லை என்பதை நம்ப வைக்க முயற்சித்தான்.ஆனாலும் இவன் பொய் சொல்லவும் கற்றுக்கொண்டான் என்பதையும் புரிந்து கொண்டாள்.காதல் மலரும் போதே இயல்பாக பொய்யும் பூத்து விடுவதும் என்பதும் இயற்கைதானே.தன் பிள்ளையின் வளர்சியைக் கண்டு மகிழும் பெற்றோர்க்கு கூடவே பயமும் சேர்ந்து வளர்வதும் இயற்கைதான்.ஏனென்றால் எல்லாப் பெற்றோரும் தன் பிள்ளைகள் இச்சமுதாயத்தில் நல்லவர்களாகப் போற்றப்பட வேண்டும் ..அதைப்பார்த்துப் பெருமை அடைய வேண்டும் என்றுதானே கனவுகளோடு பெற்றவர்கள் வாழ்கிறார்கள்.அதற்கு ராசாவின் தாயார் மட்டும் விதிவிலக்கா என்ன?அவள் தன் பிள்ளை இந்த வயதிலேயே காதல் வயப்பட்டு கல்வியில் கவனம் தவறி விடுவானோ என்ற அச்சம் அவளைப் பற்றிக்க்கொண்டது.அவனிடமிருந்து உண்மையை வரவழைக்க மீண்டும் மீண்டும் சில வினாக்களைத் தொடுக்கிறாள் .

“டேய் இங்க பாரு! இது பருத்தி மாறு புடுங்கிக் காச்சுப்போன கைகள்..ஊர்ல உள்ளவகெல்லாம் சொல்றாங்க நல்லா வயசு வந்த புள்ளய வீட்ல வச்சுக்கிட்டு நீ ஏங் இப்படிக் கஷ்டப்படனும்.அவனப் படிக்க வச்சு என்ன பண்ணப்போற.இந்தக் காலத்துல படிச்சவங்களுக்கு எல்லாம் வேல கிடக்கிறதாக்கும்.பைத்தியக்காரி.அவன ஒரு வேலவெட்டிக்குகு அனுப்பாம இப்படி வீட்ல வச்சு அழகு பாக்குறய.இப்படி படிப்பு படிப்புன்னு படிக்க வக்கிறியே அவங் நாளக்கி உன்னயத் தெருவில சட்டிதான் எடுக்கவிடப் போறாங் பாருன்னு எங்கிட்ட உன்னயப்பத்தி அவங்க அப்படிப் பேசும்போது அவங்ககிட்ட நாங் என்ன சொல்லுவேங் தெரியுமா.’அடி போங்கடி!பொறாம புடிச்சவளுகளா ஏம்புள்ளயப்பத்தி எனக்குத் தெரியும்முடி.உங்க புத்தி மதி ஒண்ணும் எனக்குத் தேவ இல்ல.நாங் கஷ்டப்படுறது போதாதா ஏம்புள்ளையும் இந்தக் கஷ்டத்த அனுபவிக்கனுமா?அவங் எனக்குக் கஞ்சி ஊத்துனாலும் சரி ஊதாட்டியும் சரி.அதப்பத்தி எனக்குக் கவல இல்ல உழைக்க முடிஞ்ச வரைக்கும் உழப்பேங் முடியாட்டி ஏதாவது மாத்திரையப் போட்டு செத்துருவேண்டி”.ன்னு அவளுககிட்ட வீராப்பாப் பேசி உன்ன நம்பி இந்த உசுர உனக்காக சுமந்துக்கிட்டு இருக்கேண்டா ராசா !ஏங் நெனப்புல மண்ணள்ளிப் போட்டுருவியோன்னு தாங்யா எனக்குப் பயமா இருக்கு.”என தன் மனத்தில் உள்ளதெல்லாம் கொட்டி அவளுடைய லட்சியம் கனவு எல்லாமே அவன்தான் என்பதைக்கூறி தன் எண்ணங்களின் உணர்வுகளை கண்ணீர் ஊற்றால் எழதிக் காட்டினாள்.

“அம்மா ஏம்மா நீ அழுகுற.நீ பயப்படுற மாதிரியெல்லாம் ஒண்ணும் ஆவாதும்மா .என்னைய நம்பும்மா.நாங் ஒம்புள்ளம்மா.நிச்சயமா ஒம்பேரக் காப்பாத்துவேம்மா.என்னைய நம்பும்மா....கமலா பழையபடி பள்ளிக்கூடம் வாராளாம்மா.அவ ஒரு பொண்ணுங்கிறாதால்ல அவ படிப்பு கெட்டுறக்கூடாதுல்ல.அதனால அவா திரும்பவும் படிக்கப்போறாங்குற சந்தோசந்தாம்மா எனக்கு.வேறொண்ணும் இல்லம்மா.என்னைய நீ புரிஞ்சுக்கோம்மா””எனத் தன் அம்மாவை சமாதானப்படுத்தி நம்பிக்கையூட்டினான்.    

“அது நல்ல விசயன்தாங்.அவ பள்ளிக்கூடம் வந்தாலும் அவகிட்ட முன்ன மாதிரியெல்லாம் ரொம்ப பழகக்கூடாது.என்ன! அவா ஒரு வயசுப்பொண்ணு.மத்தவங்க கண்ணுக்குத் தப்பாத் தெரியாம ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும் தெரிஞ்சதா.போ பள்ளிக்கூடம் நேரமாச்சுல்ல பொறப்புடு.மத்தியான சாப்பாடு கம்மந்தோச சுட்டு மொளகாத் தொவையல் அரச்சி மூடி வச்சிருக்கேங்.சோறு வேணும்னாலும் அடுப்புல கவுத்தி வச்சிருக்கேங்.உனக்கு எது வேணுமோ சாப்புட்டுக்கோ.சாப்புட்டுட்டு ஏனத்தக் நல்லாக் கழுவி மூடி வச்சுரு.நாங் முதலாளி வீட்டுப் புஞ்சைக்கு மாறு புடுங்கப் போறெங்.பள்ளிக்கூடம் போகும்போது கதவால நல்லா சாத்தி கயிறு வச்சு நல்லா இறுக்கிக் கட்டிட்டுப்போ!ஏன்னா தொறந்து போட்டுப் போய்ட்டியின்னா நாய் வந்து எல்லாத்தையும் தின்னுட்டுப் போயிரும்.பாத்துக்கோ!நாங் வரட்டா.என மக்கனுக்கு சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிவிட்டு வேக வேகமாக வேலைக்கு விரைந்தாள் அன்னை.

ராசாவும் மணமான கம்மந்தோசை மொளகாத் தொவையல் நல்லா ருசிச்சு  சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களைக் கழுவி பத்திரமாக மூடி வைத்துவிட்டு.வீட்டுக் கதவை நன்கு கயிறு வைத்து இறுக்கிக் கட்டிவிட்டு தன் பைக்கூட்டைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்குக் கிளம்பினான்.
வழகாமாகப் பார்ப்பதுபோல் கமலா வீட்டு ஜன்னலைப்பார்க்கிறான் அவள் ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டு ராஜாவை ஏக்கமுடன் நோக்குகிறாள்.எல்லாவற்றையும் அவளும் கேட்டுவிட்டவளாய் தன் பார்வையில் கண்ணீர் ஒழுகக் காட்டுகிறாள்.அம்மா சொன்னதெல்லாம் கேட்டுவிட்டாளோ என எண்ணி தன் தலையை தொங்கவிடுகிறான்.அவன் மௌனம் ,”ஆமாம் அம்மா அப்படித்தான் சொன்னாள்.அவள் பெற்ற்வளாச்சே அவள் பிள்ளையைப்பற்றி அவளுடைய கவலை அது..அதனால் என்ன?அம்மாவை நான் சமாளிதுக்கொள்கிறேன்”என்பதுபோல் தன் ஆறுதலான பார்வையில் அவளுக்கு உணர்த்தினான்.

சரி விடு பெற்றவள் அவள் உன்னை விட்டுக்கொடுத்துவிடுவாளா?கடவுள் விட்டபடி நடக்கட்டும்.பார்த்துக்கொள்ளலாம் என அவளும் தன்னையும் அவனையும் தேற்றும் விதத்தில் ஒழுகும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவனிடம் பேசுவதற்கு ஆயத்தமான சைகையில் க்குக்கும் எனச்செறுமினாள்.அதையும் புரிந்து கொண்டு தன் நோக்கை மெதுவாக மேலே உயர்த்தி .என்ன சொல்லப்போகிறாய் எனும் ஆர்வத்தில் அவளைப்  பரிவோடு பார்க்கிறான்.

மெதுவான தளதளத்த குரலில் “ராசா!எனும் அழைப்பிலேயே அவளையும் மீறி கண்கள் சொரிகிறது.அவளை அதற்குமேல் நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் என்பதுபோல் .நீ ஒண்ணும் கவலைப்படாதே எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் எனும் விதத்தில் மௌனத்தில் தன் தலை அசைத்து மறுமொழி செய்து தன் கைகளை காட்டி நான் வருகிறேன் எனச்சொல்வதுபோல் அவளைப் பார்த்துக் கொண்டே நகர்கிறான்.
ஆனாலும் கமலா ,ராசா! நாங் சொன்னது ஞாபகம் இருக்குல்ல சாரட்ட சொல்லி எப்படியாவது எங்க அப்பாட்ட வந்து பேசச்சொல்லு.நாங் இந்த சிறைச்சாலையை விட்டு எப்படியாவது வெளியில வரணும்.அதுக்கு நீதாங் உதவனும் எனக் கூறி தன் கைகளைக்கூப்பி வணங்கி கண்ணீர் உதிர்த்தாள்.அப்போது அவன் நெஞ்சே கசங்கி விட்டதுபோல் வலித்தது`அடக்கிப்பார்த்தும் அடக்க முடியாதவனாய் கதறி ஓசை வெளியில் வராதபடிக்கு தன் வாயைப்பொத்திக்கொள்கிறான்.பின் சமாளித்துக்கொண்டு தன் வழியும் விழிகளைத் துடைத்து.மேலும் அவள் சோக முகத்தைக் காணத் துணிவில்லாதவனாய் தன் முகத்தைத் தாழ்த்திக்கொண்டு வேகமாக் நடந்தான் தொடர்ந்து தன் கண்களில் உதிர்த்தும் துடைத்தும் கொண்டு.

(தொடரும்}
கொ.பெ.பி.அய்யா.

Thursday, 20 February 2014

கரிசல் மண்ணில் ஓர் காவியம்...12
அத்தியாயம்—12
கமலாவுக்குள் பாரதி குடியேறிவிட்டான்.அவளுடைய நம்பிக்கை,தெளிவு,தீர்வு,அறிவு,பலம் என அத்தனை சக்திகளும் பன்மடங்காய் பெருகி அவள் ஒரு மகா சக்தியாக உருவெடுத்தாள்.இனி என்னுடைய எதிர் காலத்தை நான்தான் தீர்மானிப்பேன். எனக்கும் அறிவு இருக்கிறது.என்னுடைய உரிமைகளைத் தடுக்க எவருக்கும் அதிகாரம் இல்லை.நான் எதை அடைய வேண்டுமென முடிவெடுக்கிறேன் என்பது என்னுடையது.என எண்ணியவாறு சட்டென்று எழுந்தவள் அடைத்து வைக்கப்பட்ட ஜன்னல் கதவுகளைத் திறந்தாள்.வெளி உலக வெளிச்சம் அவள் கண்களில் பிரகாசித்தது.இருண்டு கிடந்த உள்ளறையில் ஒளி பரவி அவளுடைய உருவத்தை ஜன்னல் கம்பிகளைத் தாண்டி சுவாசிக்கச் செய்தது.
கைகள் கட்டப்பட்டு அடங்கிக்கிடப்பது போன்ற நிலை மாறி இதுவரை இல்லாத ஒரு புது உத்வேகம் அவளுக்குள் ஏற்பட்டது.அது அவளுக்கு அதிசயமாகவும் தைரியம் சொல்லும் ஊக்கமாகவும்  இருந்தது.ஜன்னலுக்கு வெளியே தேடிய கண்கள் ~எங்கே ராஜாவைக்காணோம்~ என அங்கும் இங்கும் எட்டி எட்டித் தேடின.வழக்கம்போல் ஒரு பாட்டு ஒண்ணு பாடுவாளே.அதை அன்றும் பாடுகிறாள்.
கண்ணா கருமை நிறக் கண்ணா .....உனைக்காணாத கண்ணில்லையே.”அப்போது அவன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு மா மரத்தின் கிளையில் படுத்து தன் சிந்தனையில் என்றோ ஒருநாள் பள்ளியில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றினை எண்ணி தனக்குள் அசை போட்டுக்கொண்டிருந்தான்.பள்ளிக்கு ஒரு நாள் செல்லும்போது  இலேசாக பின் புறத்தில் கிழிந்திருந்த சின்ன ஓட்டையுள்ள தனது கால்ச்சட்டையை அணிந்து சென்றிருந்தான்.தேடிப்பார்த்தும் அன்று அவனுக்குக் கிடைத்த டவுசர் அதுதான்.வறுமையின் அடையாளமும் அதுதான்.அதைக்கண்ட சக மாணவர்கள் அவனைப்பார்த்துக் கேலி செய்தனர்.`ஓட்டைக் குண்டிப் பயடா இவன் “ என நக்கலாக அவனைப்பார்த்துச் சிரித்தனர்.அந்தக் குறும்புக்கார மாணவர்களில் ஒருவன் அந்தக்கிழிந்த ஓட்டையில் விரலைவிட்டு இழுத்து ஓட்டையைப் பெருசாக்கிவிட்டான்.
வீட்டில் மாற்றிக்கொள்வதற்கு வேறு சட்டையும் இல்லை.பின்னால் டவுசரை திரும்பிப்பார்த்தான்.ஓட்டை பெரிதாகி கிழிந்து தொங்கியது.ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது “டேய் ஏண்டா என்டவுசரக் கிழிச்ச” என சற்று ஓங்கிய குரலில் கேட்டான்.அதற்கு அந்த மாணவன் “அப்படிதாண்டா கிழிப்பேன்.நீ ஓட்டக்குண்டியா வந்தா கிழிக்காமலா இருப்போம்”என ராஜாவின் எரிச்சலை தூண்டும் விதமாகவே பேசினான்.இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கமலா வேகமாக வந்து “பாவண்டா ராஜா.அவங்க ரொம்ப ஏழடா.வேற சட்ட இருந்தா போட்டுக்கிட்டு வரமாட்டானா?ஏண்டா இப்படிச்செஞ்சே”என இரக்கப்பட்ட குரலில் கேட்டாள்”
நீ என்ன அவனுக்கு சப்போட்டா?இது அவனுக்கும் எனக்கும் உள்ள பிரச்சன எடையில நீ எதுக்கு வார.என பேசிக்கொண்டே அவளைத் தள்ளிவிட்டான் அந்த சேட்டைக்கார சிறுவன்.அதைக்கண்ட ராஜாவிற்கு வேகம் பொத்துக்கொண்டு கிளம்பியது.அதுவரை பேச்சாகப் பொறுமையிலேயே பேசிக்க்கொண்டிருந்தவன் அதிரடியாக அந்த வம்புக்காரனின் சட்டையை எட்டிப்பிடித்தான் ‘டேய் ”சண்டைக்கு வாறதா இருந்தா எங்கூட வாடா கமலாவ ஏண்டா தள்ளிவிட்ட.”என ”அவனைப் பிடித்து இவன் தள்ளினான்.இப்படியே சண்டை வளர்வதைக்கண்ட கமலா அழுதுகொண்டே சென்று ஆசிரியரிடம் முறையிட்டாள்`ஆசிரியர் அந்த சிறுவனைக் கண்டித்து முட்டி போடச்சொன்னார்.அன்று இந்த ராஜாவுக்காக அந்தப் பயலிடம்  எம்புட்டுக் கோபபட்டாள் என்பதை அவள் இவன் மீது வைத்திருந்த அன்பாக எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தான்.அந்த வேளையில் இந்த பாட்டும் அவனிடம் போயச்சர்ந்தது.
படீரெனத் துள்ளி எழுந்தான்.அவன் படுத்திருந்தது ஒரு சிறு மரக்கிளை என்பதையும் மறந்தான்.பாவம் சம நிலை சமாளிக்க முடியாமல் பொத்தெனக் கீழே விழுந்தான்.மரக்கிளையின் குச்சி ஒன்று குத்தி இலேசான சிராய்ப்பு.ரத்தம் எட்டிப்பார்த்தது.ஆனாலும் அதை அவன் கண்டுக்கொள்ளவில்லை.ஜன்னல் பக்கமாக ஓடினான்.இவன் ஓட ஓட பாட்டும் இவனை வாடா வாடா என அவ்வசரப்படுத்துவதுபோல் இருந்தது,தவித்து இளைத்து ஜன்னலைக் கண்டு நின்றான்.அவள் இவனைக்கண்டதும் இன்னும் பாட்டின் விசையைக்கூட்டி உன்னைத் தேடித்தானடா இந்தப்பாட்டு என்பதுபோல் அழுத்திப் பாடினாள்.பார்த்த பின்னும் பாட்டு நிற்கவில்லை.மகுடி கண்டு மயங்கிய நாகத்தைப்போல் தன்னை மறந்தவனாய் இது நிசந்தானா என்பதுபோல் வியந்தவனாய் உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்ட சிலையாகி நின்றான்.
அப்போதும் அவள் பாடிக்கொண்டுதான் தொடர்கிறாள்.பேச்சை அவன் ஆரம்பிக்கிறானா என கால அவகாசம் கொடுக்கிறாளா?இல்லை பரிட்சிக்கிறாளா?அவள் இதழ்கள் பாட்டை வாசித்தாலும் அவள் இதயம் அவளுக்குள் அழுகிறது.அதை அவள் கண்கள் கண்ணீரால் சொல்கிறது.பாடிக்கொண்டே அவனைப்பார்க்கிறாள்.இத்தனை நாளும் நானும் உன்னைத் தேடாமலில்லை.என்பதைக்கூறுவதுபோல் தன் விழிகள் உதிர்க்கும் துளிகளை தன் முந்தானையால் துடைக்கிறாள்.என்னை நீயும் நினைத்தாயா என விசாரிப்பது போன்று பாட்டை நிறுத்திவிட்டு இமை தட்டாது அவள் அவனை நோக்கும்போது அவள் கண்கள் நீருக்குள் மீன்களாய் நீந்துகின்றன.அம்மீன்கள் துள்ளும்போது சிதறும் நீர்த் திவளைகளாய் அவள் தன் சுட்டு விரல்களால் சுண்டிவிடும் கண்ணீர்த்துளிகள் இவன் மீது படுகின்றன.பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ என்பதுபோல் இருவரும் கண்களாலேயே நலம் விசாரித்துக்கொண்டு அசையா ஓவியம் போல் பேச வார்த்தைகளை மௌனமாக தங்கள் சிந்தையில் தேடுகிறார்கள்.இப்போது யார் முதலில் தொடர்வது.
அந்த வகையில் ஆண்கள் பொறுமையை இழந்தவர்கள்தான்.அதுதானே ஆண்மை.பெண்கள் இந்தவகையில் முந்துவதும் அவ்வளவாக ரசனை இருக்காது,அதனாலும் பெண் புத்தி பின் புத்தி என்பரோ!ஆனாலும் அதுதானே பெண்மையின் அழகும் தனிச்சிறபபும்.பெண்மை என்பதே மென்மைதானே.அதனால் இப்படிப்பட்ட சிக்கலான தருணங்களில் அவர்களுக்கு அழுதுவிடுவதே மிகவும் எளிமையாகிவிடுகிறது.
கமலா.............................................~!என சொல்லும் போது அவன் உதடுகள் துடிக்கின்றன கண்கள் கலங்குகின்றன.அவனையும் மீறி அழுகின்றன.வார்த்தைகள் வரிசையில் வரத் தடுமாற்றம் அடைகின்றன.இருந்தாலும் இழுத்து வந்து நிறுத்தப் போராடுகின்றான்.சொற்கள் கோர்வைக்குள் வரத் தயங்கி தனித் தனியே ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு சேர்ந்து வரச்சிரமப் படுகின்றன.ஆனாலும் சமாளிக்கிறான்.
மீண்டும் ஆரம்பிக்கிறான் கமலா.......!ஏம்மேலே உனக்குக் கோபமா?அன்னைக்கு ஆச்சி...........என இழுத்து மேலும் தொடர்வதற்கு சிரமப்பட்டு அழுகிறான்.இப்பொழுது கமலா வாய் திறக்கிறாள்..
‘‘எல்லாம் எனக்குத் தெரியும்.அன்னிக்கு ஆச்சி மேலத்தான் தப்பு.எங்க அப்பா கூட ஆச்சியத்தான் திட்டுனாரு.ஆச்சி அப்படித்தான்.பாவம்!நீயும் உங்க அம்மாவும்........சரி...சரி...அழாதே.........அதான்....நாங் இப்போ பேசிட்டேங்ல்ல.அப்பொறம்என்ன? டேய் ராஜா நீ எனக்கு ஒரு உதவி செய்வீயா?
“உதவியா......என்ன செயனும்?சொல்லு சொல்லு!.எங்க அம்மாகூட உங்கூடப் பேசுறது தப்புண்ணுதாங் திட்டுறா.நீ என்னமோ வயசுக்கு வந்துட்டயாமே.வயசுக்கு வந்த பொண்ணுங்கிட்ட ஆம்பளப் பசங்க பேசுனா தப்பாமே!எனக் கிறுக்குத்தனமாக உளறினான் ராஜா.
சீ...ப்....போடா மடையா......இனிமே நாம யாருக்கும் பயப்பட வேண்டியதே இல்ல......ஆமாண்டா நானும் பள்ளிக்கூடம் வரப்போரேங்.....+2 பரிச்ச வருதுல்ல,.......படிக்கனும்ல்ல..என சகசமாகவே கமலா கூறினாள்`
அப்போ பள்ளிக்கூடம் வருவியா?நிசமாவா?........எனச்சந்தோஷதில் ஆச்சர்யப்பட்டான் ராஜா.  
ஹூம்....... அதனாலதான் நீ எனக்கு ஒரு உதவி செய்ணும்.
நாங் என்ன கமலா செய்ணும்.
“ஆமா ....நம்ம சார்ட்ட சொல்லி எங்க அப்பாட்ட பேசச்சொல்லனும்.சார் சொன்னா எங்க அப்பா கேப்பாரு.”
‘கேப்பாரா’``````````````/?என வடிவேல் குரலில் பேசினான் ராஜா.
இப்போது கமலா கல கல வென சிரித்தாள்`கமலா சிரித்ததும்ராஜாவும் சிரித்தான். சோகம் மாறியது.
சுந்தரம் தொடர்கிறது.
(தொடரும்)

கொ.பெ,பி.அய்யா.

Monday, 17 February 2014

கரிசல் மண்ணில் ஒரு. காவியம்.11

அத்தியாயம் 11

கமாலாவின்வீட்டில்எல்லோரும்மருத்துவ மனையில்தான்இருந்தார்கள்.கமாலா தன்னந்தனியேதான் வீட்டில் இருந்தாள்.இந்தத் தனிமைதான் அவளைப் பாடாய்ப் படுத்தியது.அவளுக்குள் எந்த அளவிற்கு அச்சம் நிறைந்திருந்ததோ அந்த அளவிற்கு அவளுக்குள் குற்றஉணர்வும்அவளைக்கொடுமைப்படுத்தியது
ஆச்சி சொன்னபடி ராஜாவைக் கூப்பிட்டு அவனிடம் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்லியிருந்தார்கள் என்பதை எடுத்துச்சொல்லி
அவனுக்கு எச்சரிக்கை செய்திருந்தால் அவனும் புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் தானும் சூதனமாகப் பார்த்து நடந்திருப்பான்.எனப் பலவிதமாக தனக்குள்ளே ஏதேதோ எண்ணி விடை தேடிக் கொண்டிருந்தாள்.

இனி அவனோடு பேச முயன்றால் அது இன்னொரு பிரச்சனையை உருவாக்கிவிடும்.இரண்டு குடும்பங்களுக்கும் இடையே வெறும் வாய்ச்சண்டை ந்டந்திருந்தால்கூட ஓரளவுக்கு நிலைமை மாறி சமாதானம் ஏற்படவும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.ஆனால் நிலைமை அப்படியில்லை அடிதடி வீண் வாய்ப் பேச்சு என சண்டை உச்ச கட்டத்தைத் தொட்டுவிட்டது.எனவே இனி என்ன மேற்கொண்டும் விளையுமோ! எதிர் கால உறவு எப்படி அமையுமோ! என கமலா நேர் எதிர் விளைவுகளை பற்றி மிகவும் விலாசமாகவே சிந்தித்தாள்.

இந்த நிலையில் அவள் இன்னொன்றையும் யோசிக்காமலில்லை.சம வயதுள்ள ஆணும் ஆணும் பழகினாலும் பெண்ணும் பெண்ணும் பழகினாலும் சமுதாயம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் போது ஆணும் பெண்ணும் பழகினால் மட்டும் சமுதாயம் ஏன் ஏற்றுக்கொள்ள அஞ்சுகிறது?சமுதாயத்தைப் பார்த்து தனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டாள்.

யாருடைய கேள்விதான் இச்சமுதாயத்தை இன்றைய அவசரத்திற்கு மாற்றி விடும்?.பெண் விடுதலைப் பற்றிப் பேச இனி எத்தனை பாரதியும் பெரியாரும் பிறந்து வர வேண்டியிருக்குமோ தெரியவில்லையே!பாவிகள் என்னைப் படிக்கவிடாமல் பூட்டி வைத்து விட்டனர்.என் வளர்சியிலும் வாழ்க்கையிலும் என்னை ஏன் சுயமாக சிந்திக்கத்தடைபோடுகிறார்கள்?.
என்னுடைய எதிர்காலம் பற்றி மற்றவர்கள் முடிவு எடுப்பதில் நிசமாகவே என்ன நன்மை ஏற்பட்டுவிடும்?அது எந்தவிதத்தில் நியாயமுமாகும்?அவரவர் வாழ்வை அவரர்தான் தீர்மானிக்க வேண்டும்.அதுதான் சரியாகவும் இருக்கும்.

ஏனிந்த ஆச்சி இப்படி யோசிக்கிறாள்.அம்மாவும் அப்பாவும் கூட ஓரளவுக்கு படித்தவர்கள்.அவர்கள் கொஞ்சம் யதார்த்தமாக யோசிக்கிறார்கள்.ஆனால் இந்த ஆச்சிதான் பழைய பஞ்சாங்கம்.குடும்பம் வீடு என்ற எல்லைகளைக் கடந்து யதார்த்தங்களை பார்க்க பயந்துகொண்டு அவள் இன்னமும் பழமைக்குள் ஒளிந்துகொண்டு வெளியில் வரமறுக்கிறாள்.
யாருக்காகவும் நான் ஏன் என்னுடைய உரிமைகளை விட்டுக்கொடுத்துப் போகவேண்டும்.எனக்கென எனக்குள்ள உரிமைகள் காத்திருப்பதை நான் ஏன் தட்டிக்கழிக்க வேண்டும்?என நியாயங்களை தனக்குள்ளே நீதிமன்றம் அமைத்து தானே வழக்காடுகிறாள்.

அப்போது மேலைக்காற்று சுழட்டி அடிக்கிறது. அலமாரியிலிருந்து ஒரு புத்தகம் படபடத்துக்கொண்டு பறந்துவந்து சில பக்கங்களை விரித்து ஏதோவொரு பக்கத்தை தேர்வுசெய்து விரிப்பதுபோல் விரிக்கின்றது.அதில் பாரதியின் வரிகள் காற்றின் வலிமைக்கு ஈடு கொடுத்து என்னைப் படித்து எழுச்சி பெறுக!மடமை விட்டு கடமை உணர்ந்து வெளியே வா!உனக்கான உரிமைகளைத் தட்டிப்பறிக்கப் பிறந்தவர் எவரும் இல்லை.நீ நீதான்.உன்னை எவருக்காகவும் மாற்றிக்கொள்ளவேண்டாம்.

உன்னைத்தான் நான் தேடுகிறேன்.நான் பாடும் புதுமைப்பெண் நீதான்.இதோ என்னை விரி!படி என்பதுபோல் கமலாவின்முன் தன்னை படித்துக்காட்ட புதுமைப் பெண்
எனும் பெண்மையாம் கண்ணகியின் வீர் உணர்வைத் தட்டி எழுப்பும் வண்ணம் பாரதிக்குள் அன்று கனன்ற அந்த விடுதலை உணர்வின் வேகப் பாய்ச்சலில் துடித்துவந்த துள்ளும் உணர்வுள்ள துடிக்கும் வரிகளை பளிச்சென அவள் கண்கள் கொத்திக்கொள்ளும் விதத்தில் விரித்துக் காட்டினான் காற்றிலே விசையாகி பறந்துவந்த பாரதி.

வரிகளின் விலாசமே அவளைக் காந்தம்போல் கவர்ந்து ஈர்த்தன.தன் கண்களை அகலவிரித்து அள்ளிப்பருக அனுமதித்தாள்.பாரதியே பாவையாகி கமலாவுக்குள் வந்து புகுந்து கொண்டவனாய் கமலாவை தன் கவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டான் மகா கவி பாரதி.

புதுமைப் பெண்
மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.

சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!

இவ்வரிகள் அவளை விட்டு விடுதலையாகு எனத்
தூண்டும் ஒளியாய் பிரகாசித்தது.அவளுக்குள் ஒரு
புத்துணர்வு எழுந்து அவளை உசுப்பியது,

(தொடரும்}


கொ.பெ.பி.அய்யா.
கரிசல் மண்ணில் ஒரு காவியம் 1௦
அத்தியாயம் 1௦
ராசாவின் தாயார்: ஒரு உறவு தொலைந்தால் அது மீண்டும் கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்ற உண்மையை அவள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள்.அக்கம் பக்கம் உறவுகள் அவசியம் என்பதையும் புரிந்து வைத்திருந்தாள்.நேற்றுவரை தாயாய்ப் பிள்ளையாய் பழகிவிட்டு இன்று ஒருவற்கு ஒருவர் பகையாளிகளாய் ஒருவர் முகம் ஒருவர் பார்க்கக் கூச்சப்படும் நிலை எவ்வளவு மோசமானது.அதனால் மனதுக்குள் ஏற்படும் வலி என்ன என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள்.
இப்படியொரு நேரக்கூடாத நிகழ்வு எப்படி நேர்ந்தது என்பதற்கான காரணம் தேட ஆரம்பித்தாள்.மகனைப் பார்க்கிறாள்.அவனும் ஒரு பக்கம் வாடி வதங்கி இழக்கக்கூடாத ஒன்றை இழந்துவிட்டதுபோல் இடிந்து போய் சோகமே சொந்தமென உட்கார்ந்திருந்தான்.மெதுவாகத் தாய் அவன் பக்கம் நகர்கிறாள்.அவனுடைய சோர்ந்து போன முகத்தைப் பார்க்கிறாள்.தாயின் பார்வை அவனுக்குப் புரிகிறது,அம்மாவைப்போலவே அவனும்தான் உணர்ந்துகொள்ள அவனுடைய கண்கள் அவளிடம் விடை தேடி அழுகிறது.
அப்படியே அவனைப் பெற்றவள் அவனுக்கு ஆறுதலாக அவனை தன் மார்போடு அள்ளி அணைத்துக்கொண்டு நடந்தது என்ன என்பதை விசாரிக்கத் தொடங்குகிறாள்
“ டேய் ராசாக்கண்ணு என்னடா இதெல்லாம் ஏண்டா இப்படி.அவர்கள் மிகவும் நல்லவர்கள்தானே!இவ்வளவு கோபம் வரும்படி என்னடா நடந்தது.இதற்குமுன் அவர்கள் யாரும் இப்படி நடந்து கொண்டது இல்லையடா .அவர்கள் நம்மை விட உசந்தவர்கள்தான்.ஆனாலும் அவர்கள் அதைக் காட்டிகொண்டது இல்லையடா.அவர்களுக்கும் நமக்கும் பகை ஏற்பட வேறு எந்தக் காரணமும் இல்லையடா.சொந்தக்காரங்க கூட நம்மீது அவர்களைப்போல் உதவியாகவும் துணையாகவும் இருந்தது இல்லையடா.இவ்வளவு பிரச்சனை ஏற்பட என்னடா ஆச்சு?ஏண்டா இப்படி?நீ ஏதாவது தப்பா நடந்துக்கிட்டியாயா?சொல்லுயா!” எனக் கவலை தோய்ந்த குரலில் கண்ணீர் மல்கக் கேட்டாள்,இதைக் கேட்ட ராசா என்ன பதில் சொல்வான் பாவம்!அவன் தன் தாயைக்கட்டி அணைதுக்கொண்டுக் கதறினான்.”அம்மா!நான் எந்தத் தப்பும் செய்யலியே!அந்த ஆச்சிதான் முன்னைப்போல இல்லம்மா!இப்பொழுதெல்லாம் அந்த ஆச்சி என்னை வீட்டிற்குள்ளேயே சேர்ப்பதில்லை.என்னை ஏதோ ஒரு வேண்டாதவனைப்போல் வெறுக்கிறாள்.அது ஏன்னுதான் எனக்குப் புரியலம்மா!”என உலகம் புரியாதவனாய்ப் பதிலுரைத்தான்.
“டேய் கண்ணா நாந்தாங் அன்னிக்கே சொன்னேல்ல.கமலா வயசுக்கு வந்துட்டா.இனிமே அவங்க வீட்டுக்கு முன்ன மாதிரி அடிக்கடி போகக்கூடாது அப்படின்னு சொன்னேல்ல.அப்புறம் ஏண்டா நீ அங்க போன .அப்பத் தப்பு உம்மேலத்தான்.அதான் ஆச்சிக்கு வேற வழி தெரியாம சண்ட இழுத்துருக்கா.ஏண்டா இப்படிப்பண்ணுன.டேய் யாரைப் பகைச்சிக்கிட்டாலும் பக்கத்து வீட்டுக்காரங்களப் பகைக்கக் கூடாதுடா!அப்படிப் பகைச்சிக்கிட்டா அப்புறம் கால் பட்டாலும் குத்தம் கை பட்டாலும் குத்தமுன்னு எதுக்கெடுத்தாலும் சண்ட வந்துக்கிட்டே இருக்கும்டா!அம்மா சொன்னாப் புரிஞ்சுக்குனுமுடா!இப்பப் பாத்தியா எவ்வளவு பெரிய சண்ட.நீ அவ்வளவு பெரிய கல்லத் தூக்கிப்போட்டியே அது அந்த ஆச்சி மேல விழுந்திருந்தா பாவம் அந்தக் கிழவி செத்துருக்கும்மடா! அந்தக் கிழவிக்கு ஏதாவது ஒண்ணு ஆயிருந்தா அப்புறம் ஒங்கதி என்னடா!கொஞ்சமாச்சும் நீ யோசிசசுப்பாத்தியா!முட்டாப்பயல நீ படிச்சவன்தான இப்படிபண்ணலாமா?இதுக்குத்தானா நாங் இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வக்கிறேன்.”என ஆழ்ந்த கவலையோடு அழுத கண்ணீரோடு ஆதங்கச்சொற்களை உதிர்த்தாள்
அந்த ஆச்சி மட்டும் அப்படிப் பேசலாமா?உன்னயப்பத்த்தித் தப்புத் தப்பா அவ பேசினா என்னால பொறுத்துக்க முடியுமா?அதாங் எனக்குக் கோவம் வந்துருச்சு.ஆத்திரம் தாங்கல.அவசரப்பட்டுட்டெங்.அப்பக்கூட அந்தக் கல்ல அவ மேல போடணுமுன்னு போடல.கல்ல எடுக்கும்போது வேகமாதாங் எடுத்த்தேங் ஆனா போடணுமுன்னு நினைக்கும்போது பயம் வந்துருச்சு.எடுத்த கல்ல எப்படியும் கீழ போட்டுத்தான ஆகணும் போட்டுட்டேங்.கீழ விழுந்த கல்லு எப்படியோ உருண்டு கிழவி காலுல பட்ட்ருச்சு..நாங் போடணுமுன்னு நினைச்சுப் போட்டிருந்தா அந்தக் கிழவி அப்பவே செத்துப் பொணமா ஆயிருக்காதா?.என குழந்தைத்தனமான பதிலை சொன்னான்.
“வாய மூடுறா மடயா!செய்யுறதையும் செஞ்சுப்புட்டு வியாக்யாணாமா பேசுற வியாக்யானம்.இன்னிக்கு இவ்வளவு தூரம் ஆயிப்போச்சே இன்னும் எப்படிறா அவங்க கூட முகம் குடுத்துப் பேசுறது.டேய் நாங் ஒண்ணு கேக்குரேங் நீ மறைக்காம சொல்லணும்.அந்தப் புள்ளயிட்டப் போயி அது இதுண்ணு ஏதாவது தப்புத்தண்டாப் பேசினயா?சொல்லுடா!”என நளினமாக விசாரிக்கத் தொடங்கினாள்.
“ஏம்மா அவட்ட இன்னிக்குன்னு நாங் புதுசாவா பேசுறேங்.நாங்க சின்னப்புள்ளையில இருந்தே அப்படிதானம்மா பழகுறோம்.இப்பமட்டும் அது ஏங் தப்பாப்போச்சு.?என விவரம் புரியாமல் கேட்டான்.
“அய்யோ உனக்கு எப்படிச்சொல்லிப் புரிய வக்கிறதுன்னு தெரியலயே!இப்படி வாழ மட்டையா இருக்கயே!டேய் அவ அப்போ சின்னப்பொண்ணு இப்ப அவ பெரிய மனிசி ஆயிட்டா அதனால ஆம்பளப் பயக கூட அவ பேசக்கூடாது.அப்படி பேசினா அது தப்பு.அவளஒரு மாப்பள பாத்துக் கட்டிக் குடுக்குற வரைக்கும் அப்படித்தாங் அவள பாதுகாப்பா வச்சுருப்பாங்க புரிஞ்சுக்கோடா.””எனப் புத்திமதி சொன்னாள்
போம்மா அவளுக்கும் எனக்கும் ஒரே வயசுதான அப்புறம் அவ மட்டும் என்னயவிட எப்படிப் பெரிய மனிசியா ஆயிட்டா?.”என விளங்கிக்கொள்ள முடியாத வயதில் விவரம் இல்லாமல் கேட்டான்.
“அடப்பாவிப் பயலே!சரி!நீ ஆச்சி மேல எதுக்குக் கல்லத்தூக்கிபோட்ட!”
“அவ உன்னத் தப்புத் தப்பாப் பேசினா அதாங் போட்டேங்”
“அது மட்டும் தப்புண்ணு தெரியுதுல்ல`இதும் அப்படிதாண்டா தப்பு.நீ கமலாவோட பேசிப் பழகிக்கிட்டு இருந்தா நாளைக்கு அவளயும் இப்படித் தப்பாத்தாண்டா பேசும் இந்த ஊரு என விளக்கம் கூறிக்கொண்டே கதறினாள் அந்த உலகம் அறிந்த தாய்.
(தொடரும்)


    கொ.பெ.பி.அய்யா.
கரிசல் மண்ணில் ஒரு காவியம்  9
அத்தியாயம்-9
கிழவி மருத்துவ மனையில் இருந்தாலும் அவள் விதைத்த கன்னி வெடிகள் ராஜாவை கமலாவின் வீட்டை நெருங்க முடியாமல் அச்சுறுத்தியது.ஒட்ட முடியாத அளவில் அந்த இரு வீட்டின் பழக்க வழக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.கமலா ராஜாவுக்காக ஒரு பாட்டுப் பாடுவாளே அந்தப் பாட்டு ஒலி கேட்டுப் பல நாட்களாகின.
கமலாவின் பாட்டு ஒலி வெளிவரும் அந்த சன்னல் கதவுகள் மூடப்பட்டிருந்தன.முன் வாசல் கதவும்.சாத்தப்பட்டிருந்தது.கமலாவின் ஒரு மெல்லிய குரல் ஒலி கூட வீட்டைவிட்டு வெளியில் கசியவில்லை.ராஜா பித்துப்பிடித்தவன்போல் இருந்தான்.சன்னல் திறக்காதா எனக்காத்திருந்தான்.வீட்டை சுற்றி அமைதியான சூழல் நிலவியது.இந்த உலகமே சூன்யமாகிவிட்டதோ என்ற பயம் அவனுக்குள் நிறைந்திருந்தது.
அப்போதுகூட கமலாவின் நிலை என்னவோ என்பதே அவன் கவலையாக இருந்தது.அவன் கவலை சரியாகத்தான் இருந்தது.கமலாவுக்கு ஏகப்பட்ட உத்தரவுகள்.அவள் எந்த ஒரு காரணம் தேடியும் ராஜாவைப் பார்க்கவோ பேசவோ கூடாது என்பது கண்டிப்பான தடை உத்தரவு.அப்படி மீறும்போது அவள் அவளுடைய தாய்மாமன் வீட்டிற்கு அனுப்பபடுவாள் எனவும் அவளை மிரட்டி வைத்தனர்.தாய்மாமன்தான் அவளுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள மாப்பிள்ளை.அதற்காகவே அவளை பொத்திப் பொத்தி அவளுடைய ஆசைகளையும் கனவுகளையும் அர்த்தமில்லாமல் அடக்கி வைத்தனர்.இது மனித இனதிற்குச் செய்யும் அநியாயம் அக்கிரமம் பாவம் என்றுதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.
குறிப்பாக பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருப்பதுதான் வேதனையிலும் வேதனை.பெண்விடுதலை பற்றிப் பேசியும் போராடியும் வந்த பாரதியும் பெரியாரும் தோற்றார்களா வென்றார்களா நிச்சயமாகக் கூறமுடியவில்லை.ஆம் இதோ அந்த சுயமரியாதைப் பகலவன் சொன்னதை அப்படியே இங்கே துணிச்சலாகச் சொல்கிறேன்.கேளுங்கள்.” பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள். ஏனெனில்இன்னமும் பெண்களுக்குத் தாங்கள் முழுவிடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறியாய்க் கருதிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியெனில்பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழமுடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருஜூப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள். அன்றியும் அப்பிள்ளை பெறும் தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாய் விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்துபோக வேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்துப் புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம். இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படாவிட்டாலும் நாம் இதைச் சொல்லுவது பெரிதும் முட்டாள்தனமோ என்பதாகப் பொது மக்கள் கருதுவார்கள் என்று இருந்தாலும் இந்த மார்க்கத்தைத் தவிரஅதாவது பெண்கள் பிள்ளைபெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலையில்லை என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப்போன்ற உறுதியுடையதாயிருக்கின்றது. சிலர் இதை இயற்கைக்கு விரோதம் என்று சொல்ல வரலாம். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள்ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை வாழ்வு நடத்தும் போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு தன்மை நடத்தி வருகின்றபோது இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோதமாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.
தவிர, 'பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விருத்தியாகாது. மானிடம் வர்க்கம் விருத்தியாகாது என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம் மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும் அல்லது இந்தத் தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாயிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இது வரையில் பெருகிக்கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.
பெண்களின் அடிமைத்தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை. ஆனால் நாம் அந்த இடத்தில் அதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை. பெண்களைப் பற்றியே நாம் கவலை கொண்டு சொல்லுகின்றோம். தற்கால நிலைமையில் பெண்கள் விடுதலைக்குப் பெண்கள் வேறு எவ்விதமான முயற்சி செய்தாலும் அது சிறிதாவது ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்தக் காரியத்தில்அதாவது பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்வித கஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இன்பமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எப்படியெனில் ஒரு மனிதன்தான் பிள்ளை குட்டிக்காரனாயிருப்பதனாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது.
பெண்களின் முழுமையான விடுதலைக்கு பெண்களே தனக்குள்ள சக்தியை உணர வேண்டும்.போராடத் துணிந்து ஒன்று கூட வேண்டும்.ஒரே குரலில் தங்கள் உரிமையை மீட்டெடுக்கவேண்டும்.அப்போது அவர்கள் பாரதியையும் பெரியாரையும் தங்களுக்குள் உயிர்த் துடிப்பாக உள் வாங்கிக்கொண்டு தாமே முன்னேற வேண்டும், 
(தொடரும்)
கொ.பெ..பி.அய்யா.






கரிசல் மண்ணில் ஒரு காவியம்.—8
அத்தியாயம்-8
எதிர் பாராதவிதமாக திடு திப்பென்று ஒருவர் தன் சட்டையைப் பிடித்து உலுக்கியவுடன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான் ராஜா.
“டேய் கேக்கிறதுக்கு ஆள் இல்லைன்னு நினைச்சியா!உனக்கு என்னடா அவ்வளவு துணிச்சல்”எனப் பேசிக்கொண்டே அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.அதோடு விடவில்லை அவனைக் காலால் உதைத்துக் கீழே சாய்த்து முரட்டுத்தனமாக மாறி மாறி அடித்தான்.இதைக்கண்ட ராஜாவின் தாயார் அவன் மேலே விழும் அடிகளை தடுக்க முயன்று கதறி அழுதுகொண்டே அவனுக்கு விழும் அடிகளை அவளே வாங்கினாள்.இந்தக் கொடுமையை பார்த்த ஊர்மக்கள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அவர்களின் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை.
நடந்த பிரச்சனைக்கு சம்மந்தமே இல்லாமல் உள்ளே புகுந்து அடாவடிசெய்த அந்த வில்லனை நடந்த நிகழ்வுகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நடுநிலைக்கூட்டம் அவனை சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்து விலக்கிவிட்டனர்.அவன்தான் ஏழுவழியான் ஏழுமலை.ஊருக்கு ஒரு சகுனி இருப்பான் என்று சொல்வார்கள் அல்லவா,அவன்தான் இவன்.ஊருக்குள் குழப்பம் விளைவித்து ஊர் மக்களை காவல் நிலையத்திற்கு அலைய விட்டு வீண் செலவு செய்ய வைத்து அதிலே வயிறு வளர்க்கும் வம்புக்காரன் இவன்.கிராமப் பஞ்சாயத்து தேர்தல் வந்தாலே இவனுக்கு நல்ல வேட்டைதான்.கிராமத்தில் போட்டி இல்லாமல் ஒரு நல்லவரை பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்து எடுக்கலாம் என கிராமம் முடிவெடுத்தாலும் இவன் அதற்கு உடன்பட மாட்டான்.எவனையாவது ஒரு ஏமாந்தவனை உசுப்பேற்றி போட்டியை உருவாக்கி அந்த அப்பாவியை கடனாளியாய் ஆக்கிவிடுவான்.
ஆகவே இந்த ஏழுவழியானைக்கண்டாலே ஊரில் பெரும்பாலான மக்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.அதனால்தான் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் அன்று ஆத்திரம் தீர அடித்துத் துவைத்துப் பிழிந்து விட்டனர்.ஊரே ஒன்று கூடிவிட்டதைக்கண்ட அவன் துண்டைக்காணோம் துணியைக்காணோம் எனத் தப்பித்து ஓட்டம் பிடித்து விட்டான்.இதுதான் கிராமத்துக்கும் நகரத்துக்கும் உள்ள வேறுபாடு.நகரத்தில் அக்கம்பக்கம் வீட்டார் என்றுகூட அண்டிப்பழகமாட்டார்கள் அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் எந்திரத்தனமான வாழ்க்கை வாழ்வார்கள்.பாசம் பரிவு நேசம் என்ற புரிதல் இல்லாத சலனமற்ற மனிதர் என்ற மனிதராய் வாழ்வார்கள்.ஆனால் கிராமம் இதற்கு நேர்மாறாய் இருக்கும்.கிராமத்தின் பரப்பும் கூட்டமும் குறுகி இருக்கும்.ஆனால் மனது விசாலமாய் இருக்கும்.ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாய் ஒரு குடும்ப உணர்வாய் ஒரே பந்தமாய் பழகியும் உதவியும் புரிதலோடு வாழ்வார்கள்.எந்தப்பக்கம் நியாயம் இருக்குமோ அந்தப்பக்கம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து நிற்பார்கள்.அதாவது அந்தக்கிராமம் ஒரு குட்டி சாம்ராஜ்யம் என்றும் கூறலாம்.அந்தக்கிராமத்தில் என்ன பிரச்சனைகள் நிகழ்ந்தாலும் அவ்வளவு எளிதில் காவல் நிலையம்வரை போகாது.அந்த அளவிற்கு கிராமத்தினர் பஞ்சாயத்துத் தலைவருக்கு மதிப்பும் அளித்து வந்தனர்.
ராஜாவும் ஒரு நல்ல பையன்.எந்த வம்பு தும்புக்கும் தலையிடமாட்டான்.தன் கல்வியில் மட்டுமே கவனமாக இருப்பான்.அதனால் கிராமத்தார் அவன் மீது ஒரு அலாதி அன்பு வைத்திருந்தனர்.அவனுடைய அம்மாவும் ஊரோடு ஒன்றி வாழ்ந்து வந்தாள்.அந்த ஊரில் யார் வீட்டிலும் நல்லது கெட்டது எது நடந்தாலும் இவள் முதல் ஆளாய் சென்று இறுதிவரை எல்லாப் பணிகளையும் உதவியாகச்செய்வாள்.ஆகவே அவளைப்பற்றி யார் என்ன சொன்னாலும் ஊர் நம்பாது.
அப்படித்தான் அன்றும் ஊர் அவள் பக்கம் நின்றது.அன்று அந்தகிழவியின் அபாண்டமான பேச்சு அவளை மட்டுமல்ல ஊரையே காயப்படுத்திவிட்டது.இளம் வயதில் விதவையானாலும் தன் மகனுக்காக தன் சுய சுக துக்கங்களை எண்ணாது தன் மகனின் எதிர் காலமே லட்சியம் எனக் கொண்டு ஒரு சத்திய வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.அதனால் அந்த ஊர் அவளுக்கு பக்க பலமாக இருந்தது.
கமாலாவின் ஆச்சியை வண்டியில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து துணையாக கிராமத்துத் தலைவரும் உடன் சென்றார்
.(தொடரும்)

கரிசல் மண்ணில் ஒரு காவியம். 7
அத்தியாயம் 7
நல்ல வேளை அந்தக் கல் கிழவியின் காலை மட்டும் காயப்படுத்தியது.இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.கமலாவின் அப்பா ஒரு பெரிய வீச்சரிவாளோடு வேகமாகப் பாய்ந்து வந்தார்.அரிவாளே தொட்டும் பாராத அந்த மனிதர் கொலை வெறிக் கோபத்தோடு கொதித்து வந்தார்.ஊரே கூடிவிட்டது வேடிக்கை பார்ப்பதற்கு.கமலாவின் அப்பாவை அக்கம் பக்கம் நின்றிருந்தவர்கள் இறுக்கிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்.
“உங்க அம்மாவுக்குதான் ஒன்னும் ஆகலில்ல”என அவரை சமாதானப் படுத்தி அரிவாளைப் பிடிங்கிக் கொண்டார்கள்.
“அட விடுங்கய்யா அந்தக் கல்லு எங்கம்மா தலையில விழுந்திருந்தா என்ன ஆயிருக்கும்.அவ செத்திருந்தா உசுர யாருய்யா குடுப்பா.இன்னிக்கு இந்தப் பயல ரெண்டுல ஒன்னு நாங் பாத்துர்ரேன்.டேய் உன்னைய சும்மா விட மாட்டண்டா. உன்னப் போலிசில மாட்டிவிட்டு என்ன பண்றேன்னு பாருடா.நீ வாம்மா போலிசுக்குப் போகலாம்.”எனக்கூறி காவல் நிலையத்திற்குப் புறப்படத் தயாரானார்கள்.

அப்போது ஒரு பெரியவர் குறுக்கிட்டார்.”யோவ் முத்துச்சாமி கொஞ்சம் பொறுமையா இருமைய்யா.போலிசு அது இதுன்னு போனா பல பல பிரச்சனைகள் வருமையா.போலிசுக்குப் போனா பிரச்சன முடிஞ்சிருமா?அவங் வந்து என்ன பண்ணுவாங் அங்குட்டு ஆயிரம் இங்குட்டு ஆயிரமுன்னு புடுங்கிக்கிட்டு மேலும் மேலும் பகையத்தான் வளத்து விடுவானுக.அதெல்லாம் ஒண்ணும் வேண்டாமய்யா எல்லாம் பேசித் தீதுக்கிடலாம்.ஊர் பஞ்சாயத்துன்னு ஒண்ணு இருக்குல்ல.அதுல பாத்துக்கலாம்.”என அந்தப் பெரியவர் சமாதானப் படுத்தினார்.இன்னும் கூட்டம் கூடி விட்டது.

இன்னொருவர் கூட்டத்தை துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.”யோவ் என்னய்யா பேசுறீங்க!அந்தக் கல்லு படாத இடத்தில பட்டு அந்தக் பெரியம்மாசெத்திருந்தா என்னய்யா ஆயிருக்கும்.கொலகாரப்பாவி ஒரு கொலை செய்ய முயற்சி பண்ணியிருக்காங் அவன ஊருக்கூட்டம் போட்டுப் பாராட்டப் போறீங்களா!இதுக்கெல்லாம் போலிசுக்குப் போனாதாங்யா சரியா வரும்..நீ வாண்ண போலிசுக்குப் போலாம்.” என எவனோ ஒருவன் எரியிற தீயில எண்ணையை ஊற்றினான்.

அப்போது வெள்ளை மீசைக்காரர் ஒருவர் நிதானமாக பொறுப்போடு பேசினார்.
“இந்தா பாரு முத்துசாமி நாங் சொல்றதக் கேளு !ஓங் வீட்ல ஒரு வயசுக்கு வந்த பொட்டப்புள்ள இருக்கு.போலிசுக்குன்னு போகும்போது விஷயம் பெருசாயிரும்`.போலிசுன்னு போனா பேப்பர்ல வந்துரும்.வெளியூருக்கெல்லாம் தெரிஞ்சா ஒவொருதரும் ஒவ்வொரு விதமா பேச ஆரம்பிச்சுருவாங்க.போலிசும் வேண்டாத கேள்வியெல்லாம் நோண்டி நோண்டிக் கேப்பாங்க அப்புறம் அசிங்கமாப் போயிர்ம்பா.அவனும் அப்படிப் பையன் இல்லப்பா.உங்க அம்மாவுக்கும் பேசத் தெரியலப்பா .பெத்த தாயப் பத்தி தப்புத் தப்பாப் பேசினா யார்தான் பொறுத்துக்கிட்டு இருப்பாங்கப்பா.சரி வா கூட்டதில பேசிக்கலாம்”என நியாயம் பேசி முத்துசாமியின் கோபத்தை தணித்தார்.

கோபம் தணிந்த முத்துசாமி “கிழவி வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதான.”அம்மாவின் மீது ஆவேசமானார்.
“அட விடப்பா !அம்மாவ ஆஸ்பதிரிக்கிக் கூப்புட்டுப் போக வழியப்பாரு.
டேய் மாரிச்சாமி!வண்டியப்போடுரா!ஆச்சியை ஆஸ்பதிரிக்கிக் கூப்புட்டுப் போகலாம்.”எனப் பெரியவர் முடித்ததும் நிலைமை சகச நிலைக்குத் திரும்பியது.மாட்டு வண்டியும் தயாராகி வீட்டு வாசலுக்கு வந்தது.ஆச்சியைத் தூக்கி மாட்டு  வண்டியில் ஏற்றினார்கள்.

அப்போது இன்னொருவர் “ஏம்பா முத்துசாமி இன்னொரு முக்கியமான விஷயம்பா!இந்தக் காயம் எப்படி ஏற்பட்டதுன்னு ஆஸ்பத்திரியில கேப்பாக.அப்ப சண்ட அது இதுன்னு உளறிக்கொட்டியிராத/அம்மா வீட்ல மாவாட்டிட்டு ஆட்டுக்கல்ல வெளிய எடுத்துக் கழுவும் போது அந்தக் கல்லு தவறி காலுல விழுந்திருச்சி.ன்னு உண்மைய மாத்திச்சொல்லு.புரிஞ்சதா.

முத்துசாமியும் தலையை ஆட்டினார்.வண்டியும் கிளம்ப ஆரம்பித்தது,மாரிசாமி ,”ட்டர ....தே ..தே”என வண்டியில் பூட்டிய காளைகளை புறப்பட ஆணையிட்டார்.வண்டி மெல்ல நகர்ந்தது.

திடீரென ஒரு முரட்டுக்குரல்.நிப்பாட்ரா வண்டிய “என வண்டியை வழி மறித்து நிறுத்திய வேகத்தில் நேரா ராசாவிடம் போனார்.யாரும் எதிர்பாராத திருப்பமாக ராசாவை சட்டையைப் பிடித்து அப்படியே அலாக்காத் தூக்கினார்

(தொடரும்)
கொ.பெ.பி.அய்யா.

    .  .    
கரிசல் மண்ணில் ஒரு காவியம்.

அத்தியாயம் 6

ஆச்சிக்கு எங்கள் நட்பின் மீது ஒரு விதமான பயம் கலந்த சந்தேகம் உருவாகத் தொடங்கி விட்டது.ஆரம்பத்தில் எங்களுக்குள் இருந்தது நட்பா காதலா என எங்களுக்கு அடையாளம் கண்டுபிடிக்கத் தெரிந்திருக்கக் கூடிய அளவிற்கு அறிவு முதிற்ச்சி இல்லைஅப்போது. எங்கள் இருவரின் உறவினர்களின் வீணான சந்தேகக் கட்டுப்பாடு கெடுபிடிகளால்தான் எங்களுடைய உறவில் என்ன இருந்தது.எது இல்லாதிருந்தது என்பதை எங்களை யோசிக்க வைத்தது.அந்தத் தேடல்தான் நட்பைத் தாண்டி காதல் எனும் இன்னும் ஆழமான புனிதமான உயிரில் கலந்த சொந்தமாக உணரச்செய்தது.

இதில் கமலாவின் குடும்பம்தான் அதிகமான எதிர்ப்பைக் காட்டியது.கமலா ஒரு பெண் எனும் பயம் மட்டும் அவர்களிடம் மேலோங்கி இருந்திருக்குமானால் அது ஒரு இயல்பான அச்சம் அல்லது அக்கறை எனச்சொல்லலாம்.ஆனால் அந்தக் காரணம் இரண்டாம் பட்சம்தான்.அவர்கள் முதன்மையாக எடை போட்டுப்பார்த்தது என்னுடைய சாதியையும் பொருளாதாரச் சூழலையும்தான்.எல்லாவகையிலும் நான் அந்தக் குடும்பத்தைவிடத் தாழ்ந்தவன் என்பதுதான் கமலாவின் குடும்பத்தாரிடம் அதிகமான கவலையாக இருந்தது.இந்த வித்தியாசம் ஒரு வேளை சமரசம் ஆகி இருக்குமானால் அன்று எங்கள் நெருக்கத்தில் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்காது என்பதே என் நம்பிக்கை.

ஆகவே எங்களின் கள்ளமில்லா அன்பை அது பிஞ்சாக இருக்கும் போதே நறுக்கி விடவேண்டும் என அவள் வீட்டில் ஆச்சியின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் கூடி ஒரு முடிவை எட்டியது.அதாவது ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து என் குடும்பத்தை வம்புக்கு இழுத்து வாய்ச்சண்டைகள் உருவாக்கத் திட்டம் தீட்டினர்.

எங்கள் வீட்டில் நாங்கள் இரண்டு ஆடுகளும் நான்கு கோழிகளும் வளர்த்தோம்.கிராமத்தில் ஏழைகளின் அவசரப் பொருளாதார உதவிகளுக்கு இந்த ஜீவன்கள்தான் உதவும்.எங்கள் ஆடுகள் அவள் வீட்டின் சுவர் ஓரமாகத்தான் படுத்துக் கிடக்கும்.கோழிகளும் அவள் வீட்டு முற்றத்தில்தான் அடிக்கடி போய் அங்கு சிந்திக்கிடக்கும் அரிசி பயறுகளை கொத்தித்தின்னும்.அந்தப் பொல்லாக்கிழவி இதைச்சரியான சாக்காகக் கண்டறிந்து என் அம்மாவோடு சண்டை இழுத்தாள்.

‘அடியே முத்தம்மா ஓங் ஆடு ரெண்டும் ஏங் சொவர ஒரசி ஒரசி கரச்சி இடிச்சிரிச்சடி.நீதாங் கண்ட கண்ட பயகளோட சாவகாசம் வச்சிருக்க.ஓங் வீடு இடிஞ்சாலும் அவனுக கட்டிக் குடுப்பானுக.எங்க சொவரு இடிஞ்சா எவண்டி கட்டிக் குடுப்பாங்.வந்த பயலுக்கு கோழி அடிச்சிப்போட ஏங் வீட்ல மேச்சிதாங் வளக்கனுமாக்கும்” என என் தாயாரின் நடத்தையை களங்கப்படுத்தும் நோக்கில் கிழவியின் சண்டை என்னைக் குறி வைத்துத்தான் அவள் வார்த்தைகளை அள்ளி வீசினாள்.

காரணம் அந்த சண்டைக்குள் என்னை இழுக்கவேண்டும் என்பதற்காகவே என் தாயாரின் நடத்தையை உண்மைக்கு மாறாக இழித்துப் பேசினாள்.பொதுவாக கிராமங்களில் சண்டை என்றாலே கணவனை இழந்த பெண்களை மிகவும் மட்டமாக வாய்கூசாமல் கேவலப்படுத்திப் பேசுவதுதான் இன்றும் வழக்கமாக இருக்கிறது.ஒரு பெண் அவள் தன் கணவனை இளம் வயதில் இழந்து விட்டால் அது ஒரு சாபக்கேடுதான்.பாவம் என் அம்மா.அப்படியே கூனிக்குறுகி விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டாள்.அதைப்பார்த்து என் மனம் பொறுக்கவில்லை.

வேறு வழியில்லை.நானும் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.தாயைப்ப் பழித்துப் பேசும் போது யார்தான் பொறுத்துக்கொள்ள முடியும்.நானும் நேற்றுவரை ஆச்சி என்று அழைத்த மரியாதையான சொல்லை  கொஞ்சம் மாற்றிப் பேசவைத்து விட்டாளே அந்தக் கூறு கெட்டக் கிழவி என எண்ணும்போது என் மனம் வேதனைப்படுகிறது.

ஆமாம் நானும் என் உச்சமான கோபத்தில் சொற்களைக் கொட்டிவிட்டேன்.
“ஏய் கிழவி!வார்த்தையைக் கொஞ்சம் அளந்து பேசு.உனக்குத்தான் பேசத் தெரியுமுன்னு பேசாத.அப்புறம் நாங் பேச ஆரம்பிச்சா ரொம்ப அசிங்கமாப் போயிரும்.நீ பெரிய மனுசி பேசிட்டே .ஆனால் நாங் சின்னப்பய.நாங் பேசிட்டா ரொம்ப மானக்கேடா ஆயிரும்” என தொடக்கத்தில் வார்த்தைகளைப்  பக்குவமாகத்தான் பேசினேன்.ஆனால் கிழவியின் வேகம் கொஞ்சமும் குறையவே இல்லை.அவள் ஒரு முடிவோடுதான் சண்டையைத் துவக்கி இருக்கிறாள்.ஆகவே அவள் தொட நினைக்கும் உச்சத்தைத் தொடாமல் விடுவதாகத் தெரியவில்லை.

ஏண்டா உங்க ஆத்தா ரொம்ப யோக்யமோடா!ஆத்தாளப் பேசுன ஒடன கோபம் பொத்துக்கிட்டு வருதோ!வயசான கெழவனுக்கு வாக்கப்பட்டு அவங் எப்பச்சாவான்னு காத்திருந்தா.அவங் எங்கடா செத்தாங் இவதானடா அவனக் கொன்னா.இப்போ இளவட்டப் பயகளாப் பாத்துப் பாத்துப் புடிக்கிறா.எவங் வாராங் எவங் போறான்னு எல்லாக் கூத்தையும் நாங்களும் பாத்துக்கிட்டுத்தான இருக்கோம்.இந்தத் தேவடியா பொழப்புத் தெரியாதாக்கும்.”என மீண்டும் கொடுமையான கடுஞ் சுடு சொற்களை அள்ளி இறைத்தாள்.
     
என் பொறுமை என்னையும் மீறி அறிவை இழந்தது.ஆத்திரம் யோசிக்க மறந்தது.நான் என்ன செய்ய முயல்கிறேன் என்பது எனக்கேவிளங்கவில்லை.
கோபக் கொதிப்பில் குணம் மாறியது.புத்தி கெட்டு கோட்டியன் போல் வெறி உச்சி முட்டியது.விஷம் ஆனது என் வெகுளித்தனம்.என்னைக் கட்டுப்படுத்த இயலாத எனக்குள் ஒரு மிருகத்தனம்.சிந்தை தொலைத்தேன்.அப்போது என்ன நடந்தது என்று இப்போது நினைத்தாலும் புரியாத புதிராகவே உள்ளது.

அய்யய்யோ அளவிட முடியாத அப்படியொரு வேகம்! அவ்வளவு பெரிய கல்லை நான் எப்படித்தான் ஒரு அட்டைக்ககல்லை தூக்குவதுபோல் அலக்காகத் தூக்கிநேனோ தெரியவில்லை.ஆச்சரியமான விளைவுதான் அது.யாரும் எதிர் பார்க்காத துயரம்.அப்படியே அந்தக் கல்லை கிழவியின் மீது ஒரே போடாகப் போட்டுவிட்டேன்.

“அட சண்டாளா!என்னையக் கொன்னுட்டயே”ன்னு பாவம்! கிழவி  தரையில் சாய்ந்தாள்`

(தொடரும்)


கரிசல் மண்ணில் ஒரு காவியம்.
அத்தியாயம்.5

மகா பாரதத்தில் என்னை அதிகமாகப் பாதித்த பகுதி நளதமயந்தி  அன்னத் தூது. அதையே தேர்ந்து படிக்கத் தொடங்கினேன்.

பிருகதஸ்வர் சொன்னார்,"வீரசேனன் மகனான நளன்என்றொரு மன்னன் இருந்தான்.அவன் பலம் வாய்ந்தவனாகவும், அழகனாகவும்,குதிரைகள் பற்றிய அறிவை அறிந்தவனாகவும், விரும்பிய அனைத்து சாதனைகளைச் செய்தவனாகவும் இருந்தான். அவன் {நளன்} தேவர்களுக்குத் தலைவனைப் போல மன்னர்களுக்குத் தலைமையானவனாக இருந்தான். எல்லோருக்கும் மேம்பட்டவனான அவன், புகழில் சூரியனைப் போல இருந்தான். அவன் நிடதநாட்டு மன்னனாக இருந்து, வேதமறிந்த பிராமணர்களின் நன்மையில் எண்ணம் உள்ளவனாகவும், பெரும் வீரத்தைக் கொண்டவனாகவும் இருந்தான். அவன் உண்மை பேசுபவனாகவும், பகடையில் விருப்பம் உள்ளவனாகவும், பெரும் பலம் வாய்ந்த படைக்குத் தலைவனாகவும் இருந்தான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அன்பால் விருப்பமுள்ளவனாகவும், பெரும் ஆன்மாவால் ஆசைகளை அடக்கியும் வாழ்ந்தான். அனைவரையும் காத்து, வில்லாளிகளில் முதன்மையானவனாக இருந்து, மனுவைப் போன்றவனாக இருந்தான்.
அவனை போலவே விதர்பர்கள் {விதர்ப நாட்டு மக்கள்} மத்தியில், பீமன்(இவன் பாண்டவப் பீமன் அல்ல பீமன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான். அவனும்  பயங்கரமான பராக்கிரமும், வீரமும் கொண்டவனாகவும், குடிமக்களுக்கு நன்மை செய்பவனாகவும், அனைத்து அறங்கள் கொண்டவனாகவும் இருந்தான். ஆனால், (இவையெல்லாம் இருந்தும்), பிள்ளையில்லாதிருந்தான். அவன் நிலைத்த மனதோடு, ஒரு பிள்ளையைப் பெறுவதற்காக தன்னால் ஆன அளவு முயன்றான்.

ஓ ஒரு நாள் அவனிடம் தமனர் என்ற பிரம்ம முனிவர்  வந்தார். மன்னர், அறநெறிகளை அறிந்த பீமன், பிள்ளை பெற விரும்பி, தனது மனைவியுடன் சேர்ந்து அந்த சிறப்புமிக்க முனிவரை மரியாதையுடன் வரவேற்று திருப்தி செய்தான். இதனால் மிகவும் மகிழ்ந்த தமனர், அந்த மன்னனுக்கும் அவனது மனைவிக்கும் ரத்தினம் போன்ற மகளையும், உயர்ந்த ஆன்மாவும், பெரும் புகழையும் கொண்ட மூன்று மகன்களையும் வரமாகக் கொடுத்தார். அந்தக் குழந்தைகள்) முறையேதமயந்தி, தமன், தாந்தன், தமனன் ஆவர். அந்த மூன்று மகன்களும் அனைத்து சாதனைகளையும் செய்பவர்களாகவும்,கொடூரமான முகத்தோற்றம் கொண்டவர்களாகவும், கடும் பராக்கிரம் கொண்டவர்களாகவும் இருந்தனர். கொடியிடை கொண்ட தமயந்தி, அழகாலும், பிரகாசத்தாலும், அருளாலும், அதிர்ஷ்டத்தாலும், உலகத்தால் கொண்டாடப்படுபவள் ஆனாள். அவள் பருவ வயதை அடைந்த போது, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான பெண் பணியாட்களும், பெண் அடிமைகளும், சச்சிக்காக {இந்திரனின் மனைவிக்காக}காத்திருப்பதைப் போல அவளுக்காக காத்திருந்தனர்.

பீமனின் மகளான அந்தக் களங்கமற்றவள், அனைத்து ஆபரணங்களும் பூண்டு, மேகங்களில் இருக்கும் பிரகாசமான மின்னல் போல, தனது பணிப்பெண்களுக்கு மத்தியில் பிரகாசித்தாள். அகன்ற விழி கொண்ட அந்த மங்கை,ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போலவே பெரும் அழகு படைத்திருந்தாள். தேவர்களுக்கு மத்தியிலோ,அசுரர்களுக்கு மத்தியிலோ, மனிதர்களுக்கு மத்தியிலோ அவளைப் போன்ற அழகு கொண்ட பெண்ணை அதற்கு முன்னர் யாரும் கேள்விப்பட்டதோ, பார்த்ததோ கிடையாது. அந்த அழகான மங்கை, மகிழ்ச்சியால் தேவர்களின் இதயத்தைக் கூட நிறைத்தாள்.

மனிதர்களில் புலியான நளன், மூன்று உலகத்திலும் தனக்கு இணை இல்லாதவனாக இருந்தான். அவன் அழகில் மனித உரு கொண்ட கந்தர்பன் {மன்மதன்} போல இருந்தான். இவற்றால் வியப்படைந்த கட்டியக்காரர்கள் திரும்பத் திரும்ப நளனின்பெருமைகளைக் கொண்டாடி தமயந்தியிடத்திலும், தமயந்தியின் பெருமைகளை நிஷாத ஆட்சியாளன்  இடத்திலும் புகழ்ந்தார்கள். திரும்பத் திரும்ப ஒருவர் நற்குணங்களை மற்றவர்கள் கேள்விப்பட்டு ஒருவர் மேல் ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே ஈர்க்கப்பட்டனர். அந்த ஈர்ப்பு, ஓ குந்தியின் மகனே வளர ஆரம்பித்தது.

பிறகு, நளன் தனது இதயத்தில் இருந்த காதலைக் கட்டுப்படுத்த முடியாதவனானான். அவன் நீண்ட நேரத்தைத் நந்தவனத்துடன் சேர்ந்த தனது உள் அறையில்  கழிக்க ஆரம்பித்தான். அங்கே  நந்த வனத்தில் தங்க இறகுகள் கொண்ட அன்னங்கள் பல உலவுவதைக் கண்டான்.அவற்றில் ஒன்றைத் தன் கரங்களால் பற்றினான். அதன் காரணமாக அந்த விண்ணதிகாரி {அன்னம்}, நளனிடம், "உன்னால் நான் கொல்லப்படலாகாது. ஓ மன்னா, நான் உனக்கு ஏற்புடைய ஒரு காரியத்தைச் செய்வேன். ஓ நிஷாதர்களின் மன்னா உன்னைத் தவிர வேறு யாரையும் (தனது தலைவனாக அடைய) தமயந்தி விரும்பாதவாறு, அவளிடம் நான் உன்னைக் குறித்துப் பேசுவேன்" என்றது.

இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் அந்த அன்னத்தை விடுவித்தான். அந்த அன்னப்பறவைகள் தங்கள் சிறகுகளை விரித்து விதர்ப நாட்டுக்குச் சென்றன. விதர்ப நாட்டுக்கு வந்த அந்தப் பறவைகள், அவற்றைக் கண்ட தமயந்தியின் முன் பறந்தன. பணிப்பெண்களுக்கு மத்தியில் இருந்த தமயந்தி, இயல்புக்கு மிக்க தோற்றம் கொண்ட அந்தப் பறவைகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, நேரத்தைக் கடத்தாமல் அந்த விண்ணதிகாரிகளைப் {அன்னங்களைப்} பிடிக்க முயன்றாள். இதன் காரணமாக, அந்த அன்னங்கள், அந்த அழகான மங்கையர் கூட்டத்திற்கு முன்பு, எல்லா திசைகளிலும் பறந்தன. அந்த மங்கையரும் ஒவ்வொருவரும் ஒரு அன்னத்தின் பின்னாக அந்தப் பறவைகளைத் தொடர்ந்து சென்றனர். தமயந்திக்கு முன் ஓடிய அன்னம், அவளை தனிமையான இடத்திற்குப் பிரித்து அழைத்துச் சென்று, மனிதக் குரலில் அவளிடம், "ஓதமயந்தி, நிஷாதர்களில் நளன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருக்கிறான். அவன் அசுவினிகளின் அழகுக்கு நிகராக, மனிதர்களுக்கு மத்தியில் தனக்கு இணை இல்லாதவனாக இருக்கிறான். உண்மையில் அவன் மனித உரு கொண்ட கந்தர்பன் {மன்மதன்} போல இருக்கிறான். ஓ அழகான நிறம் கொண்டவளே, ஓ கொடியிடையாளே, நீ அவனுக்கு மனைவியானால், நீ வாழ்வதற்கும், உனது அழகுக்கும் ஒரு காரணம் இருக்கும்.நாங்கள் தேவர்களையும், கந்தர்வர்களையும், நாகர்களையும், ராட்சசர்களையும், மனிதர்களையும் கண்டிருக்கிறோம். ஆனால் நளனைப் போன்ற ஒருவனை நாங்கள் இதுவரை கண்டதில்லை. ஆண்களில் நளன் தலைமையானவன் ஆனது போல, நீயும் உனது பெண்ணினத்தில் ரத்தினம் தான். சிறந்தவர்களுடன் சிறந்தவர்கள் சேரும் போதே மகிழ்ச்சி ஏற்படுகிறது" என்றது அன்னப்பறவை.

ஓ ஏகாதிபதியே , அன்னத்தால் இப்படிச் சொல்லப்பட்ட தமயந்தி, அன்னத்திடம் "நீ இதே போல நளனிடமும் சொல்" என்றாள். ஓ மன்னா "அப்படியே ஆகட்டும்" என்று விதர்பனின் மகனிடத்தில் சொன்ன அந்தமுட்டையிடும் இனத்தைச் சேர்ந்த அன்னப்பறவை நிஷாதர்களின் நாட்டிற்குத் திரும்பி, அனைத்தையும் நளனிடம் கூறியது.

கமலா கதையை ஆர்வமாக கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தவள் என்னையும் கவனித்தாள்.
“சரியான ஆள்தான் நீ”எனச்சொல்வதுபோல் மௌனமாகப் புன்னகைத்துத் தலை குனிந்தாள்.ஆனால் ஆச்சி என்னையும் கமலாவையும் மாறி மாறி நோக்கினாள்.

(தொடரும்)
அடுத்த தொடர் 18/i/2014.
கொ.பெ.பி.அய்யா.
கரிசல் மண்ணில் ஒரு காவியம்.4
அத்தியாயம் 4
காதல் அறியாத வயது.ஆனால் அவள் மீது எனக்கொரு ஈர்ப்பு.அதை குழந்தைத்தனமான அறிவற்ற மோகனம் என்றுகூடச்சொல்லலாம்.என் சோட்டுப் பசங்களிடம் நான் கொண்டிராத ஒரு தனிப்பற்று கொண்டு அவளிடம் நான் பழகினேன் என்பது மட்டும் என் நினைவில் இருக்கிறது.பால் வேற்றுமை எங்களுக்குள் பழக்கத்தில் இல்லை .ஆனால் உணர்வில் ஒளிந்திருந்ததோ என்னவோ தெரியவில்லை.அப்பருவத்தில் அது தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை.காலப்போக்கில் அறிவும் அனுபவமும் வளர வளர அதுவே எங்களுக்குள் இயல்பாகவே காதலாக துளிர்விட ஆரம்பித்தது.
பிஞ்சாக இருக்கும்போது தொடங்கிய அந்த நட்பு.பருவம் வளர வளர பால் வேற்றுமை புரியத் தொடங்கியது. குழந்தைத் தனத்தில் இயல்பாகத் தோன்றிய அந்த ஈர்ப்பு பால்வேற்றுமை புரியும்போது காதலாகக் கனிந்தது.குழந்தைகளாக பழகியபோது அஞ்சாமல் ஆடிய ஆட்டமும் பாட்டமும் வாலிபமாக பருவம் விளைந்து முற்றியபோது அஞ்சி ஒளிந்து கொள்ள முயன்றது.அந்த அச்சம்தான் நட்பைக் காதலாக மலரத் தூண்டியது.
பொதுவாக ஒன்றின் ஓட்டம் இயல்பபாக தன்போக்கில் தொடரும்போது அதன் திசையும் விசையும் மாறுவதில்லை.அது தடைகளை சந்திக்கும் போதுதான் அது வினை மாற்றம் அடைகின்றது.அதன் வலிமையும் கூடுகின்றது.அவ்வாறுதான் ஆண் பெண் இருபாலருக்கும் இடையே ஏற்படும் நட்பும் அது தன் நடப்பின் நட்பாக தொடரும் வரை சலனமின்றித்தான் போய்க்கொண்டிருக்கும்.அதற்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் ஏற்படும் போதுதான் அது தன் நட்பு எனும் காய் நிலையிலிருந்து காதல் எனும் கனி நிலைக்கு உயரத்.துடிக்கிறது.எவ்வாறு ஒரு கூட்டுப்புழு தன் கூட்டுக்குள்ளே வளர்ந்து முற்றியபோது கூட்டைக் கிழித்துக்கொண்டு அழகிய வண்ணங்களையுடைய சிங்காரச்சிறகுகளால் வண்ணத்துப்பூச்சியாக பறக்க முயல்கிறதோ அதுபோலத்தான் காதலும் தன் தடைகளைத்தாண்டி வெளிப்படுகிறது.
கமலாவின் பருவத்தோடு காவலும் வளர்ந்தது.காவலின் பலம் அதிகமாக அதிகமாக எங்களின் காதலும் வலிமை கூடி காவலையும் மீறத் துடித்தது.ஆச்சி எங்களை கவனிக்கும் வேலையையே பிரதானமாகக் கொண்டிருந்தாள்.என் நிழல் கூட அவள் வீட்டு முற்றத்தில் விழக்கூடாது என்பதில் கவனமாக இருந்து காவல் காத்து வந்தாள்.பொல்லாத ஆச்சி அவள் பகல் பொழுதெல்லாம் வீட்டு வாசல்படியில்தான் உக்காந்துக்கிட்டு பக்கத்து வீட்டுக்கிழவியையும் பேச்சுத்துணைக்கு கூட்டி வைத்துக்கொண்டு வெற்றிலையை சவைதுத்க்கொண்டு பேசிக்கொண்டே இருப்பாள்.நான் ஏதாவது சாக்குச்சொல்லி வீட்டுக்குள் நுழையலாம் என்று முயற்ச்சிப்பேன்.ஆனால் ஆச்சியின் அந்த பலமான காவலைத் தாண்டி என்னால் நுழைய முடியாதபடி வாசலை முழுமையாக அடைத்துக்கொள்வாள்.
ஆச்சி வருடம் தவறாமல் ஏகாதேசிக்கு விழித்திருப்பது வழக்கம்.என்னைத்தான் மகா பாரதம் வாசிக்கக் கூப்பிடுவாள்.இந்த வருடம் என்னைக்கூப்பிடவில்லை.நானும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொள்ள மறக்கவில்லை.வழக்கம்போல் ஆச்சி வாசலில்தான் உக்காந்திருந்தாள்.நானும் அலையாத விருந்தாளியைப்போல் வலியக்கட்டி போய் நின்னேன் .என்னை உக்காருன்னு சொல்லல.சொல்லாட்டி என்ன நானே சப்புன்னு உக்காந்து
“என்ன ஆச்சி இன்னிக்கு ஏகாதேசி.மகாபாரதம் படிக்கலாமா?எப்போ ஆரம்பிக்கலாம்?நாங் குளிச்சிக்கிளிச்சி ரெடியா வந்துட்டேங்.”ன்னு சொல்லி நானும் வாசல் படியில உக்காந்துக்கிட்டு ஆச்சியோட பேச ஆர்ம்பிச்சுட்டேன்.
ஆச்சி விடுவாளா என்ன!”இல்ல இன்னிக்கு கமலாவே படிப்பா”
ஆச்சி இன்னிக்கு எனக்கு கத படிக்கத் தோதில்ல.அப்போது "அவனே படிக்கட்டும்”
உள்ளே இருந்து கமலாவின் குரல்.
“என்ன ஆச்சி வருசமெல்லாம் நாந்தான படிக்கிறேன்.பாவம் கமலா அது என்னக்கிப் படிச்சிச்சி.இதோ புஸ்தகம் கொண்டுட்டே வந்துட்டேங் ஆச்சி “ன்னு சொல்லிக்கிட்டே கதய படிக்க ஆரம்பிச்சிட்டேங்.  ஆச்சி இந்த இடத்தில் தோற்றுத்தான் போனாள்.அவளாள் வேண்டாம் என்று என்னைத் தடுக்க முடியவில்லை.கதையை நான் வாசிக்கத் தொடங்கினேன்,அவள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த ஆச்சி.ஏதோ அவளுக்குள் முணுமுணுத்து "சரி....சரி ....படி "என என்னை அனுமதிப்பதுபோல் அனுமதித்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள் பாவம்.
கொ.பெ.பி.அய்யா.

     



கரிசல் மண்ணில் ஒரு காவியம்.
அத்தியாயம் 3
வாசலைத் தாண்டி நான் உள்ளே செல்ல எனக்குள் துணிவு இல்லை.ஏன் அந்த அச்சம் அது எனக்கு விளங்கவில்லை ஆனாலும் அவளுடைய புதிய தோற்றம் அவள் முன் என்னை அவளைவிடச்சின்னவனாக குறுக்கிவிட்டது.அவளிடம் அந்தக் குறும்புத்தனம் மறைந்திருந்தது.அவள் முகமே புதுப்பொலிவாய் சொலித்தது.என்னிலும் வயது கூடிப் பெரியவளாகத் தோன்றினாள்.பாவாடை சட்டை மாறி கூடுதலாகத் தாவணி அவள் பருவ மாற்றத்தை விலாசம் காட்டியது.ஏனோ தெரியவில்லை அவளை போடி வாடி என அழைக்க மனம் துணியவில்லை.என்னை அறியாமலே அவள் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது.அவள் பெரிய மனிசி ஆகிவிட்டாள் வயதுக்கு வந்துவிட்டாள் என்ற சொற்களுக்கான விளக்கம் இப்போது எனக்குப் புரிகிறது.

.அப்போது எனக்கு வயது பதினான்கு.அவளுக்கும் அதே வயதுதான் ஆனாலும் அவளுக்குள் தெளிந்த அந்த முதிற்சி எனக்குள் வளற்சி இல்லை.அதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தலைமுறை இடைவெளி.ஆணைவிட பெண்ணுக்கு அனுபவ ஞானம் வேகமாக வளர்கிறது என்பதும் அறிவியல் உண்மை.அதனால்தான் ஆணைவிட பெண்ணுக்கு திருமண வயது குறைவாக இருக்கவேண்டும் என அக்காலப் பெரியவர்கள் கண்டறிந்து சொன்னார்கள்.குறைந்த பட்சம் பெண்ணைவிட ஆணுக்கு ஐந்து முதல் பத்து வயது அதிகம் இருந்தால்தான்.ஆணுக்கும் பெண்ணுக்கும் அனுபவ ஞானம் சமநிலை ஆகும் என்பது பழமை கணித்த கணக்கு.ஆணைவிட பெண்ணுக்கு வயது இடைவெளி அதிகமான நிலையில் அவர்களுக்குள் புரிதல் இடைவெளி அதிகரிக்கும்.இதைதான் ஆங்கிலத்தில் ஈகோ என்று சொல்வார்கள். அப்படியான நிலையில்தான் குடும்பத்தில் சில சமயங்களில் பிரச்சனைகள்,குழப்பங்கள்.ஏற்படும்பொழுது அவர்களால் அதைச் சமாளித்துச் சரிக்கட்டி அனுசரித்து இணைந்து வாழ முடியாமல் பிரிய வேண்டிய கட்டாய சூழலுக்குள் அநேக தாம்பத்ய உறவுகள் தள்ளப்படுகின்றன.
எங்களுக்குள் நீண்ட நேர விவாதம் இப்படித்தான் நீண்டன.
ஏய் உள்ள வாலே.....ஆச்சி வந்தால் என்ன சொல்வாள்.......அவட்ட நாங் சமாளிச்சுக்கிறேன்........`நீ வாலேஅவள் துணிச்சலாக என் கையைப்பிடித்து இழுக்கிறாள்.ஆனால் நான் பயத்தில் அவள் கையைத் தட்டுகிறேன்.

ஏல ஒன்னுமில்லல........எங்க வீட்ல நேத்து பணியாரம் செஞ்சாங்க........ரெண்டத் தாரேன் சாப்பிட்டுப் போலமீண்டும் என் கையைப்பிடித்து உள்ளே இழுக்கிறாள்.
வேண்டாம்..........நாங் இங்கேயே நிக்கிறேன்..........நீ போயி எடுத்துட்டு வா..........ஆச்சி பாத்தா..வையும்..........எனக்குப் பயமா இருக்கு.........என்ன விடு எனப் பதறிய மொழியில் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லுகிறேன்.
சரி இவங் வேலைக்கு ஆகமாட்டான்” என எண்ணி அவளே அலுத்துக்கொண்டாளோ என்னவோ,விடுவிடுன்னு வீட்டுக்குக்குள்ளே போனாள்.ரெண்டு பணியாரத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்`”இந்தா......போல....பயந்தான்கொள்ளிப் பயல் .நீ..உன்ன என்ன நாங்......அவிச்சா தின்னுடப் போறேன்.....பேசி ரொம்ப நாளாச்சே ..பேசலாமுன்னுதான கூப்பிட்டேங்.......இப்படிப்பயந்து சாவுரஎன சலித்துக்கொண்டே அவளும் வெளியே வந்து அந்த முருங்கை மரத்தைக் கட்டிப்பிடித்துச் சுற்றினாள்.

நாங் பணியாரத்தை தின்னாமல் கையில் வைத்துப்பார்த்துக் கொண்டே நின்றேன்.என்னைக்கவனித்த அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை.கலகலவெனச்சிரித்தாள்.
ஆமா..ஏஞ் சிரிக்கிற.....உனக்கு கொஞ்சங்கூட பயமே இல்லயா” நானும் பேச ஆரம்பிச்சேன்.
அட போடா களிமண்ணு.....ஆமா என்னல பயம் உனக்கு,.......ஏண்டா இப்படி ஆயிட்ட......என்னல ஆச்சு உனக்கு.” என என்னை ஏளனம் செய்து மீண்டும் சிரித்தாள்.
வேறொன்னுமில்ல உங்க ஆச்சியக் கண்டாத்தாங் எனக்குப் பயமா இருக்கு....கமலா பெரிய மனிசி ஆயிட்டா ..அவட்ட இன்னுமே நீ பேசக்கூடாதுன்னு எங்க அம்மாவும் சொல்லிட்டா ..அதான்.............

அதாங் பயந்துட்டயாக்கும்....அடப்போடா முட்டாள்....பெரியவங்க இருக்கும் போது அப்படி இருந்துக்க வேண்டியதுதாங் ....அவங்க இல்லாத போது இப்படி நாம பேசிக்க வேண்டியதுதாங்.எனப் பெண்ணுக்கே உரிய புத்திசாலித்தனமாகவும் பேசினாள்.அப்போது அவள் அறிவை வியந்து பாராட்டும் பக்குவம் இல்லை.அதை இப்போது எண்ணும் போது எனக்குப் பொறாமையாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது.என்ன இருந்தாலும் சமயோசிதப் புத்தி என்பது பெண்களுக்குக் கொஞ்சம் அதிகம்தான்.அதனால்தான் பெண்ணுக்குப் பின் புத்தி என்பார்கள்.ஆமாம் பின்னும் பின்னும் என அவள் புத்தி விரிந்து கொண்டே பெருகும்.அதனால் பெண்கள் அவ்வளவு எளதில் ஏமாந்துவிடமாட்டர்ர்கள்.

விடுதலையான கூண்டுக்கிளிபோல் என்னையே மகிழ்ச்சியில் பார்க்கிறாள்.நேரிலே பூக்கும் மல்லிகைபூவாய் சிரிக்கிறாள்.ஆனந்தக்களிப்பில் அந்த முருங்கை மரத்தைப் பாடாய் படுத்துகிறாள்.என்ன செய்வது அவள் புரிந்து கொண்டதை நான் புரிந்து கொள்ளவில்லையே.அவள் வயதுக்கு வந்து விட்டாள்.நான் அப்போது இப்போது போல் விவரமாக இல்லையே.இப்போது அந்நிகழ்வை நினைக்க நினைக்க எனக்கே கேவலமாக இருக்கிறது.கள்ளமில்லா அந்தப்பிள்ளைப் பருவத்தை எண்ணிப்பார்க்கும் போது பெருமையாகவும் இருக்கிறது.இறைவன் செய்யும் விந்தை அது.வளரும் பருவத்தில் அதை ஒளித்து வைத்து வாழும் பருவத்தில் அள்ளித்தருகிறான்.இறைவன் எவ்வளவு பொறுப்பானவன் பார்த்தீர்களா?எதை எதை எந்த எந்த பருவத்தில் மறைக்க வேண்டுமோ அதை அதை அந்த அந்த பருவத்தில் மறைத்தும் உணர்த்தியும் விந்தை செய்யும் அவன் சிறப்பே சிறப்பு.

அந்த முருங்கை மரத்தை அவள் சுற்றி சுற்றி ஆடுகிறாள்.நான் எட்டிநின்றுதான் வேடிக்கை பார்க்கிறேன்.

கொ.பெ.பி.அய்யா


.(தொடரும்)