Friday, 28 March 2014


கரிசல் மண்ணில் ஒரு காவியம் 2௦

 

அத்தியாயம் 2௦

 

கமலாவிற்காக இன்று பாடசாலையில் கோலாகல வரவேற்பும் கொண்டாட்டமும் பள்ளியில் நிறைந்து காணப்பட்டது.முதலாவது சுதந்திர விழாப்போல் வகுப்பறைகள் எல்லாம் பரபரப்பாக இருந்தன.அவளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணமாக நிறைந்தன.இந்த நாள் அவளின் திருப்புமுனை நாளாக எண்ணி அவள் மனது மகிழ்ச்சியில் பொங்கிவழிந்தது.நல்ல பொழுதாய் விடிந்த இந்த நன்னாளை தனது வரலாற்றில் ஒரு பொன்னாளாய் பதித்துக்கொண்ட அவள் பள்ளி வேளை முடிந்து வீட்டுக்குத் திரும்பத் தயாராகி வாசலில் ராஜாவிற்காகக் காத்திருக்கிறாள்.

 

ராஜாவும் வருகிறான்.”என்ன நிக்கிற வீட்டுக்குப் போகல”எனக் கேட்கிறான்.அம்மா சொன்ன ஆலோசனைகள் அவன் நினைவுக்கு வருகின்றன,அன்னையின் அறிவுமொழிகள் சரிதான் என அவனுக்குத் தோன்றியதால் கமலாவுடன் செல்ல அவன் யோசிக்கிறான்.

 

“என்ன யோசனை ராஜா?”என அவன் வித்தியாசமான முகக்குறிகளைக் கவனித்துக் கேட்கிறாள்..சுதாரித்துக்கொண்ட ராஜா,”அதெல்லாம் ஒன்றுமில்லை”என சமாளிக்கிறான்.

“ஒன்றுமில்லை என்கிறாய் அப்புறம் ஏன் என் முகத்தப்பாக்கப் பயப்புடுற.என்ன பயமா?யாராவது ஏதாவது சொல்லுவாங்கன்னு யோசிக்கிறியா”என அச்சம் தவிர்த்தவளாய் பேசினாள்.

இந்த கேள்விக்கு ஆமா என தலையாட்டி தன்னை ஒரு கோழையாக அவள் முன் அடையாளம் காட்டிக்கொள்ளவும் துணியாதவனாய்:யாருக்காகவும் எதற்காகவும் நான் ஏன் அஞ்சவேண்டும் என தன்னை அஞ்சா நெஞ்சனாக நெஞ்சை நிமிர்த்தி அவளுடன் செல்ல ஆண்சிங்கமாக சிலிர்துக்கொள்ளவும் அவசரம் இல்லாதவனாய் இருதலைக் கொள்ளி எறும்பாக அசைவற்று நின்றான்.

 

புரிந்துகொண்டாள் கமலா.”சரி நீ ரொம்ப யோசிக்கிற.இப்படியே நின்னுக்கிட்டே யோசிக்கப் போறியா?எதுவானாலும் இங்கயே யோசிச்சு முடிச்சிரு.நடந்துக்கிட்டே யோசிக்கிறது ஆபத்துப்பா.ஏன்னா பாதையில பள்ளம் மேடு இருக்கும்.வண்டிகள் போகும் வரும்.பாதையில கவனம் மாறுனா பயணம் அபாயம்பா.அதனால நல்லா நிதானமா நின்னு யோசிச்சுட்டு வீட்டுக்குப் போப்பா.பயந்தாங்கொல்லி....... .பயந்தாங்கொல்லி.”என அவனைக் கோழையாக்கி விட்டு அவள் தைரிய லட்சுமியாய் நடையைக் கட்டினாள்.

 

இந்தக் காட்சியைக் கண்ட சக மாணவர்கள் சும்மா இருப்பார்களா என்ன!.கமாலாவின் வீர வசனத்தைக் கேட்டு கை தட்டி ஆர்பரித்தார்கள்.திடுக்கிட்டுப்போன ராஜா வெட்கத்தால் தலை கவிழ்ந்தான்.அதிலே ஒரு தன்மானச்சிங்கம். ராஜாவின் தாழ்ந்த சிரத்தை நிமிர்த்தினான்.

“ராஜாவின் தலை எப்போதும் கவிழக்கூடாது.அவளோடு இணைந்து போனால்தானே பிரச்சனை அவள் முன்னாலயே போகட்டும்.நாம் பின்னாலயே போவோம்.வாடா வா”என ராஜாவின் முதுகைத் தட்டி அவளின் பின் அழைத்துச்சென்றனர்.

 

கமலா சற்று சில அடிகள் தூரத்தில் முந்தியும்.ராஜாவும் அவன் நண்பர்கள் கொஞ்சம் பிந்தியும் அதாவது சீதைக்குப் பின்னால் ராம சகோதரர்கள் பின் தொடர்வதுபோல் இருந்தது அந்தக் காட்சி.திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சத்தமில்லாச்சின்னச்சிரிப்பு செய்துகொண்டு பெண்ணுக்கே உரிய அழகு நடை நடந்து சென்று கொண்டிருந்தாள்.

 

போகும் வழியில் ஒரு ஓடைப்பாலம்.அதில் உட்கார்ந்துகொண்டு போகிற வருகிற இளம் பெண்களை கேலிகிண்டல்.நையாண்டி,நக்கல் அடித்துக்கொண்டிருந்தார்கள் அர்த்தமில்லா சில அற்பர்கள்.இதெல்லாம் வாடிக்கைதானே என அதைப் பொருட்படுத்தாமல் அவர்களின் கூத்துக் கோமாளித்தனமான சொற்களை காதில் போட்டுக்கொள்ளாமல் அவர்களைக் கடந்துகொண்டிருந்தாள்.அப்போது அதிலும் ஒரு நெஞ்சழுத்தக்காரன்.”நேத்துப் பூத்தாளே ரோசாமொட்டு....பறிக்கக் கூடாதோ லேசாத் தொட்டு.”என அவளைப் பார்த்துப் பட்டுப்பாடிக்கொண்டே ஆட்டமும் போட்டான்.அதைக்கண்டு கொள்ளாத கமலா மேலும் தன் நடையைத் தொடர்ந்தாள்.      

 

“அடடே அதோ பார்ரா ராஜா பின்னால படையோட பாது காப்பா வாராரு. ராணியம்மா பத்திரமா பவணி போறாக.இது எப்படி இருக்கு.?”என நையாண்டி செய்தான்.அதற்கு அவன் உடனிருந்த அற்பர்கள்,”சூப்பரு”என ஒத்திசைத்தார்கள்.

 

கமலா தன் செருப்பைக் கழட்டினாள்.”பொறுக்கிப் பயல்களா....உங்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சிகளே இல்லையாடா அயோக்ய நாய்ங்களா...வேல வெட்டி இல்லாத வெட்டிக் கழுதைங்க......இவா பொட்டச்சிதானன்னு அற்பமா நினச்சிங்களோ! அற்பப்புழுக்களா!......மத்த பொண்ணுக்கிட்ட ஆட்ன வால எங்கிட்ட ஆட்டலாமுன்னு நினைச்சேங்க அறுத்துருவேங் அறுத்து ஜாக்கிரத.....!”எனக் கழட்டிய செருப்பை சுழட்டி வீசினாள்.அவ்வளவுதான் அதற்கு மேலும் அங்கிருந்தால் ஆபத்து என உணர்ந்த அந்த அசிங்கப்பிறவிகள் ஓட ஆரம்பித்தார்கள்.

வீசியெறிந்த செருப்பை தன் காலில் திரும்பவும் மாட்டிக்கொண்டு வீர நாச்சியாராய் வெற்றி நடை போட்டாள் வீரமங்கை கமலா.

 

அவளை வைத்துக்கொண்டு பிரச்சனைக்குள் நுழையக்கூடாது என பொறுமை காத்த ராஜாவும் அவன் நண்பர்களும்.அவள் அவ்விடம் விட்டுக்கடந்ததும்.கலைந்து ஓட முயன்ற அந்த சாக்கடைக் கிருமிகளை மடக்கிப் பிடித்தார்கள்.

 

“ஏண்டா விசப்பூச்சிகளா.......உங்களுக்கு இதே வேலையாப் போச்சுல்ல..தெண்ட சோறு திங்கிற நாயுங்க....உங்களுக்குப் பொழுது போகலையின்னா பொழைக்கிற வழியப்பாத்து ஏதாவது வேல செஞ்சி அப்பன் ஆத்தா அக்கா தங்கச்சிங்களக் காப்பாத்துங்கடா.கல்யாண ஆச வந்தா ஏதாவது பொட்டக்கழுதையாப்பாத்துக் கட்டிக்கிட்டு மேக்க வேண்டியதுதானடா.ஏண்டா இப்படிப் படிக்க வாற பொண்ணுங்கள பாழாக்கப் பாக்குறீங்க பாவிங்களா.!......அட சண்டாளங்களா!உங்களப்போல அலையிற நச்சுப்பாம்புகளுக்குப் பயந்துக்கிட்டு தானடா பொண்ணுங்களப் பெத்தவங்க பொண்ணுங்களப் படிக்க அனுப்புறதுக்கே பயந்துக்கிட்டு வீட்டுக்குள்ளயே பூட்டி வைக்கனுமுன்னு நினைக்கிறாங்க.இப்பத்தான் ஒண்ணு ரெண்டு பொண்ணுங்களப் படிக்க வைக்க அனுப்புறாங்க.அதையும் கெடுத்துப் பழையபடியும் அவங்கள வீட்டுக்குள்ள அடைச்சிப் பூட்டுப்போட வச்சுருவீங்க போலிருக்க.நீசங்களா!.உங்களையெல்லாம் விட்டுவைக்கக் கூடாதுடா.எது உங்களச்சீண்டிவிடுதோ அத அறுத்துட்டா அப்புறம் இப்படிச்செய்யவேண்டிய அவசியம் இருக்காதுல்ல.....டேய் எடுறா அந்த பிளேட அறுத்துறலாம்”என ராஜா சொன்னவுடன் அவன் நண்பர்கள் அந்தக் கொடியவர்களைக் கீழே தள்ளிக் கிடத்தி பைகளுக்குள்ளிருந்து ஆளுக்கொரு பிளேடை எடுத்து கட்டுப்பாடு அறுவை சகிச்சை செய்யத் துணிந்தார்கள்.அவ்வளவுதான்.அந்த வீணர்கள் பயத்தில் அழுது ஓலமிட்டார்கள்.”தம்பிகளா நாங்க இனிமே இந்தப்பக்கமே தலை வைத்தும் படுக்கமாட்டோம்.நீங்க நல்லா இருப்பீங்க எங்கள விட்டுடுங்க உங்களுக்குக் கோடிப்புண்ணியம்.நீங்க சொன்னமாதிரி ஏதாவது வேலைவெட்டி தேடி வெளி ஊருக்காவது ஓடிப்போயிருறோம்”என அலறித்துடித்து ஒப்பாரியிட்டார்கள்`

 

‘இல்ல இல்ல அது இருந்தாதான உங்களுக்குத் தொல்ல.நீங்க சும்மா இருந்தாலும் அது உங்கள சும்மா இருக்க விடாது.பயப்புடாதீங்க வலியில்லாமக் கட் பண்ணியிறலாம்.....புடிங்கடா”மாணவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கத்தியை எடுத்தார்கள்.

 

“அய்யய்யோ ஒண்ணு சேர்ந்துட்டாங்கப்பா...நம்மள விடமாட்டாங்கப்பா......அய்யா சாமிங்களா நாங்க இன்னுமே இந்த ஊர்லயே இருக்கல எங்கயாவது கண்காணாத இடமாப் பாத்து ஓடிப் போயிடுறோம். எங்கள விட்டுடுங்க”எனக் கைகூப்பி வணங்கி காலில் விழுந்து அழுது தொழுதார்கள்.

 

“சரி அப்படின்னா ஒண்ணு செய்யலாம் உங்கள எல்லாத்தையும் போலீசுல ஒப்படச்சிடுறோம்.அப்பத்தான அவங்க உங்களக் கண்காணிச்சிக்கிட்டு இருப்பாங்க.உங்க பேரையும் அவங்க பத்திரமா எழுதி வச்ச்சுக்குவாகல்ல....வாங்க வாங்க “என அத்தனை பேரையும் பத்திரமாக அடித்து இழுத்துக்கொண்டுபோய் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒட்டு மொத்தமாக ஒப்படைத்தார்கள்.அந்தக் காலக்கட்டத்தில் குற்றவாளிகளுக்கு காவல் நிலையம் என்றாலே சிம்ம சொப்பனம்.காவல் என்று சொன்னாலே கால்டவுசர் நனைந்து விடும். 

.         .

(தொடரும்)

 

கொ`பெ`பி`அய்யா`

 

    .

 

 

Friday, 21 March 2014

கரிசல் மண்ணில் ஒரு காவியம்19
அத்தியாயம் 19
வெற்றி நடை பொட்டு நேர் கொண்ட பார்வையுடன் மனதில் எதிர்காலக் கடமைகளைச்சுமந்தவளாய்ப் பாடசாலைக்குச்செல்கிறாள் கமலா.ஊரின் கண்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான பார்வையில் அவளை விசாரிக்கின்றன,
“என்ன கமலா இன்றுமுதல் உனக்கு விடுதலையா?”என வினவும் புது மலர்ச்சி காணத்தேடும் புதுமை நாடும் கண்கள் சில.
“மீண்டும் கல்வி கற்கச்செல்கிறாயா?”எனக் கேட்டு வரவேற்கும் அறியாமை இருள் நீங்காதா! என ஏங்கும் விழிகள் சில.
“காலம் மாறிவிட்டதா?”என வியந்து விரியும் பார்வைகள் சில.
“பாரதி கண்ட புதுமைப்பெண் இவள்தானா?”எனப் போற்றிமகிழும் புதிய சிந்தனைக்குக் காத்திருக்கும் கண்கள் சில.
“ம்ம்ம்ம் பொட்டக்கோழி கூவி பொழுது விடிவா போகிறது?”என மயங்கும் பத்தாம் பசலித்தனமான பாவ விழிகள் பல.
இப்படிப் பலப்பல விதமான பார்வைகளைக் கடந்து அவள் பள்ளிக்கூடம் நோக்கிய தன் பயணத்தைத் தொடர்கிறாள்.
கமலா இன்று பள்ளிக்கு மீண்டும் வருகிறாள் என்பதை அறிந்த அவளுடைய தோழமைகள் அவளை வரவேற்க பள்ளி வாசலில் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
“அதோ வருகிறாள் கமலா இதோ வந்துவிட்டாள் கமலா.மாதர்குல மாணிக்கம் வருகிறாள்,எதிர்கால இளைய தலைமுறையின் விடிவெள்ளி வருகிறாள்.நாகரிக வாழ்வின் நம்பிக்கை நட்சத்திரம் வருகிறாள். அடிமைத்தளை அறுத்த அற்புதப் பெண்ணவள் வருகிறாள்.பாரதியை சுமந்து வருகிறாள்.பகலவன் பெரியாரை ஏந்தி வருகிறாள்.சுயமரியாதை சொன்ன அதிசய மனிதர்களின் கனவுகளின் நிசமாய் வருகிறாள்”என வாசலில் கூடி நின்ற மாணவக் கண்மணிகள் சுதந்திரக் காற்றை சுவாசித்தவர்களாய் உற்சாக ஒலி எழுப்பிக்கொண்டு ஆரவாரத்தோடு கமலாவை புத்துணர்வோடு வரவேற்று வகுப்பறைக்குள் அழைத்துச்செல்கிறார்கள் ஆர்வம் கொண்ட சக நண்பர்கள்.
அத்தனை அன்பு வரவேற்பையும் வெற்றிக்களிப்போடு ஏற்றுக்கொண்ட கமலா.முதலில் தலைமை ஆசிரியரைச்சந்திக்கச்செல்கிறாள்.அதிகமாக ஆரவாரம் காட்டிக்கொள்ளாமல் அடக்கி வாசிக்கும் ராசா அவளுக்கு முன்பாகவே அவன் தலைமை ஆசிரியர் அறையில் இங்குதான் வருவாள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறான்.அவன் பள்ளியின் முதல் மாணவன் என்பதால் அவனுக்குத் தலைமை ஆசிரியரிடமும் ஏனைய ஆசிரியர்களிடமும் அவனுக்கு நல்ல வரவேற்பு உண்டு.ஆகவே ராசாவின் முயற்சிக்கு ஆசிரியப்பெருமக்கள் உறுதுணையாக இருந்தார்கள்.இந்த வெற்றியில் ராசாவுக்கும் முக்கியப்பங்கு உண்டு என்பதால் அவனையும் ஆசிரிய மற்றும் மாணவ சமுதாயங்கள் மனம் உவந்து பாராட்டிக்கொண்டிருந்தன,
கமலா வருவதைக்கண்ட ராசா ஆனந்தக் களிப்பில் தன் மெல்லிய புன்னகையால் வரவேற்கிறான்.அவள் தன் நன்றியை கைகளைக் கூப்பி கண்கள் நிறப்பி ஆராதிக்கிறாள்.
“வாழ்க நீ “என தன் பூரிக்கும் விழிகள் பொங்க வாழ்த்துகிறான்.கமலா தலைமை ஆசிரியரின் அறைக்குள் கைகள் கூப்பி வணங்கிய வண்ணம் சென்று அவருடைய பாதங்களில் பணிந்து ஆசிர்வாதம் பெறுகிறாள்.கமலாவை தன் இருகரங்களால் தூக்கி நிறுத்தி விழிகளை துடைத்துவிட்டு ஒரு மகளிடம் ஒரு தந்தை காட்டும் பாசமாகப் பரிமாறிக்கொள்கிறார்.
“நல்லது.நீ எதை நினைத்தாயோ அதில் உறுதியாக நின்று சாதித்துவிட்டாய்.உன் சாதனை இன்றைய பெண்குலத்திற்கு ஒரு தூண்டலாக இருக்கட்டும்.இனி எதிர்காலப் பெண்ணினம் விழித்துக்கொள்ளும்.நீ ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தாலும் எதிர் கால உலகில் உனக்கும் உரிய கடமைகள் உண்டு என்பதை நீ உணர்ந்து கொண்டதால்தான் உன்னை நீயே தட்டி எழுப்பிக்கொண்டாய்.உனக்குள் எழுந்த அந்த உணர்வுத் தூண்டல்களுக்கு எழுத்துக்களைத் தந்து வாழும் மகான்களை நீ மனதில் எண்ணிக்கொள்.அவர்கள் உனக்கு ஒளியாக ஒளிர்ந்து உனக்கு வழி காட்டுவார்கள்.பெரியவர்கள் கண்ட கனவிற்கு இன்று நீ விடையாகி விளங்குகின்றாய்.உன்னுடைய எழுச்சியும் துணிவும் எதிர் காலத்திற்கு ஒரு சவாலாக விளங்கட்டும்.இப்போது எனக்குள்ளும் ஒரு நம்பிக்கை பிறந்துவிட்டது.இனி பெண்மை பழமைக்குள் மயங்கிக் கிடந்து மங்கிவிடாது.மீண்டும ஆண்டாள்கள், ஔவைகள்,சரோஜினிகள்,நாச்சியார்கள்,லட்சுமிபாய்கள்,மங்கையர்கரசிகள் போன்ற அதிசயப் பெண்குலம் தோன்றி இவ்வையம் சம உரிமையுடன் வாழ வழி காட்டும்.நீயும் இந்த நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் ஒரு அங்கம் வகிக்க வேண்டும் என நான் என் மனதார வாழ்த்துகிறேன்.வாழ்க!என வாழ்த்தி,”
“ராசா!கமலாவை வகுப்பறைக்கு கூட்டிட்டுப்போ” என கட்டளையிட ராசா கமலாவை வகுப்பறை வழிகாட்டி அழைத்துச்செல்கிறான்.
(தொடரும்)
கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 18 March 2014

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 18

அத்தியாயம் 18

“ஏண்டா வேல வெட்டிக்குப் போக வேண்டாமா?பள்ளிக்கூடம் போற நேரத்துல அங்க என்ன பண்ணுற”தாயாரின் அவசரம் அவளுக்கு.
“இல்லம்மா ..அது வந்து......இதோ வந்துட்டேங் அம்மா.......நாங் கெளம்பிட்டேங்ம்மா” ஓடி வருகிறான் ராஜா.
“என்னடா கெளம்பிட்ட சாப்புட வேண்டாமா வா சட்டுப்புட்டுன்னு சாப்புட்டுட்டு நீ கெளம்புனாத்தான நாங் ஏங் வேலயப்பாத்து போகமுடியும்.வா சாப்புடு”அவசரமாக அழைத்த தாய் அவனுக்காக சாப்பாடு எடுத்து வைக்கிறாள்.ராஜா வேக வேகமாக சாப்புடுகிறான்.

“ஏண்டா இப்படி அவக்குத் தொவக்குன்னு அவசரமா அள்ளிப்போடுற விக்கிக்கிடப் போவுது,தண்ணியக்குடி”என மகன் சாப்பிடுவதை பார்த்து தன் பசி தீர்ப்பவளாய் அவன் உண்ணும் ஒவ்வொரு கவளமும் தன் வயிறில் நிறம்புவதாய் திருப்தி அடைகிறது பெற்ற வயிறு,
“நீ சாப்புடலயாம்மா?”எனத் தாயாரின் பாச முகத்தில் அவள் தன் பசியை மறந்திருப்பதை உணர்ந்து நினைவூட்டுகிறான்.

மகனின் அக்கறையான விசாரிப்பு அவள் பசியை முற்றிலுமாக ஆற்றிவிடுகிறது.ஏழையின் குடிசையில் எவராவது ஒருவர் பசியை தியாகம் செய்யத்தானே வேண்டும்.அந்தத் தியாகத்தின் சொரூபம் பெரும்பாலும் தாயாகத்தான் இருக்கும்.இவளும் அந்தத் தாய்தான்.பசி ஏழைக்குப் பழகிப்போனதுதானே.பசி பாசத்தின் முன் ஏழையின் வாழ்வில் ஒன்றும் பெரிய விசயமும் இல்லை.ஆச்சரியமும் இல்லை.அன்றாட அனுபவம்தானே!

தன் பிள்ளையின் பசி ஆறிய முகத்தை பூரண திருப்தியோடு பார்க்கிறாள் ஏழைத்தாய்.
“ஏம்மா என்னயே பாக்குறே....என்னம்மா”பரிவோடு கேட்கிறான்.
“நாங் உன்னயத்தானடா பாத்து சந்தோசப்பட முடியும்.எனக்கு இந்த உலகத்தில வேற என்னடா கவல இருக்குது.நீதானடா ஏங் உசுரு.உனக்காகத்தான இந்த உசுரு இன்னும் கெடக்குது.”எனத் தன் கண்களைத் துடைக்கிறாள் தாய்.
“அம்மா நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்மா.ஓங் கஷ்டத்த எல்லாம் நாங் தீத்து வப்பேம்மா.நீயும் சாப்புடும்மா”என சோத்துப் பானையின் சோகம் புரியாமல் மழலை உதிர்த்தான்.
இருப்பு நிலைமை என்னவென்று அறிந்திருந்த அன்னை தன் பிள்ளையின் பாசம் கேட்ட ஆனந்தத்தில் மென்மையாகப் புன்னகைத்து “சரியா நீ போயிட்டு வா”மகனை வழியனுப்பி ஆறுதலடைந்தாள்.

ராசாவும் பையைத் தன் தோளில் மாட்டிக்கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான்.
“போயிட்டு வாரேம்மா.”அன்புடன் விடை பெறுகிறான்.
சரி ராசா எனக் கூறி வழி அனுப்பும்போது,”டேய் ராசா”
“என்னம்மா”ஆவலோடு கேட்கிறான்.

“வேறொண்ணுமில்ல......இன்னிக்கு கமலாவும் பள்ளிக்கூடம் வாராளாமே”
“ஆமாம்மா நல்ல விசயம்தானே”என தன் மகிழ்ச்சியைப் பகிர்கிறான்.
பொம்பளப்புள்ள படிக்கபோறது நல்லதுதாண்டா.அதனாலதாங் சொல்றேங் அவ தொடந்து படிக்க வரணும்முல்ல.......”என ஏதோ ஒரு இரகசியத்தை உள்ளே வைத்து சொல்ல வருகிறாள் தாய்.

“ஆமாம்மா அதுல என்ன சந்தேகம் இருக்கு”என ஆவலோடு வினவினான்.
“சந்தேகம் இல்லடா சந்தோசந்தாங்.அதனாலதாங் உனக்குச்சொல்றெங்.நீ அவட்ட அதிகமாப் பேசுறதயோ பழகுறதயோ கொஞ்சம் கொறச்சுக்கனும்.ரொம்பக் கவனமா இருக்கணும்.அப்படி இல்லையிண்ணு வச்சுக்கோ அப்பொறம் அதயே சாக்கா வச்சு அவளப் படிக்கபோறது போதுமுன்னு நிறுத்திருவாங்க தெரிஞ்சுக்கோ...என்னடா அம்மா சொல்றது புரியுதா”என பக்குவமாக தன் மகனுக்குப் பாடம் சொல்கிறாள் உலகம் உணர்ந்த அனுபவ அன்னை.

“சரிம்மா.....புரியுதம்மா...நாங் வாரேம்மா.”பள்ளிக்கு இன்று புத்துணர்வோடு போகிறான்.அதேபோல் கமலாவின் வீட்டிலும் கமலாவுக்குப் புத்திமதி கூறி பள்ளிக்கு அனுப்ப்கின்றனர் அவள் தாயும் தந்தையும்.

இருண்ட வானில் மின்னல்கள் பெண்ணின் விடுதலை கண்டு ஆனந்தம் கொண்டு கைகொட்டி பளிச்சிடும் சிரிப்பொளிகளை வாழ்த்துப் பாடல்களாக வானெங்கும் பரப்பி முழக்குகின்றன.பூச்சூடி பொட்டிட்டு புதுப்பொலிவுடன் புறப்படுகிறாள் பள்ளிக்குக் கமலா.இன்று வையமெங்கும் திருவிழாப்போல் வானமே மங்களம் இசைக்கிறது.வாழ்த்துகின்றது.

(தொடரும்)         .

கொ.பெ.பி.அய்யா.
  .  


Sunday, 16 March 2014

கரிசல் மண்ணில் ஒரு காவியம்17

அத்தியாயம் 17

கூண்டுக்கிளி ஒன்று விடுதலை பெற்று அது தன் சிறகுகளை விரித்து ஆனந்தமாக விண்ணில் பாய்ந்து பறப்பது போன்ற உணர்வில் கமலா ஆனந்தக்களிப்பில் அங்குமிங்கும் துள்ளிக்குதித்து உற்சாகமுடன்  ஓடிக்கொண்டும் பாடிக்கொண்டும் தன் மகிழ்ச்சியைக் கொண்டாடினாள்.பழமையை பாராட்டி வந்த ஆச்சி தோற்றுப்போனவளாய் ஒரு மூலையில் சுருண்டு கிடந்து கமலாவின் எழுச்சி கண்டு ஏதும் பேசமுடியாதவளாய் உம்மென்ற மூஞ்சியுடன் தனிமைப்பட்டுப் போனாள்.

அதிகாலைப்பொழுதில் பறவைக் கூட்டங்கள் பாடிப்பறந்த வண்ணமாக இருந்தன.வானம் வெளுத்து அது தன் வீதியெங்கும் மஞ்சள் வண்ண ஒளியைப் பூசி மங்களம் மந்திரம் ஓதிக்கொண்டிருந்தது.கமலா இன்று மீண்டும் பள்ளிக்குச்செல்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டதோ என்னவோ அந்த விடிகாலைப் பொழுதும்.வழக்கத்திற்கு மாறாகவே உலகம் புத்துணர்ச்சி பெற்று புதுப்பொலிவுடன் காணப்பட்டது.

கமலாவின் விடுதலைக்காகப் போராடிய ராஜா கமலாவின் சுதந்திர கீதத்தை ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டு ரசித்துக்கொண்டிருந்தான்.அப்போது ஜன்னல் வழியே ஒரு காகிதச்சுருள் பறந்துவந்து அவன் காலடியில் பணிந்தது.என்னவென்று எடுத்து அதை விரிக்கிறான்.அது கமலாவின் கைவண்ணத்தில் உருவான அவள் இதயம் வரைந்த எழுத்தோவியம்.

பௌர்ணமி ஒளியில் பரவசம் ஆடும் கடல் அலைகளென அவன் கற்பனைகள்.ஒன்றன் பின் ஒன்றாக தொடர்கின்றன.வள்ளுவன் எழுதிய முதல் குரல் கண்டு தமிழன்னை எந்த அளவில் ஆனந்தம் அடைந்திருப்பாளோ அந்த ஆனந்தத்தின் விளக்கம் இன்று அவன் முகத்தில் ஒளிர்ந்தது.இன்பத் திளைப்பில் அவன் இதயம் துடித்த வேகத்தின் அளவை எந்தக் கருவி கொண்டும் அளவிட முடியாது.விழிகள் விரிகின்றன.கடிதத்தில் விளைந்து குவிந்து கிடக்கும் மணிகளை அள்ளி ஆராதிக்க ஆவல் கொண்டு பாய்கின்றன.அந்தப் பாய்ச்சலின் வெப்பத்தைக் குளிர்விக்க விழிகளில் பனித்துளிகள் துளிர்க்கின்றன.

எழுத்தில் கோர்க்கப்பட்ட அந்த முத்து மாலைகளை அவன் கண்கள் தம்மில் ஒத்திக்கொள்கின்றன.வாசம் நுகர்ந்து பாசமுடன் படிக்கின்றன.ஆசைகள் வரிகளை நகர்த்துகின்றன.

“என் இதயம் நிறைந்த ராஜா!இன்று உன்னால் எனக்கு விடுதலை.இது என் வாழ் நாளில் ஒரு விடிவு காலம்.எனக்கு விடியலைத் தந்துதவிய பகலவன் நீ!உனக்கு நன்றி சொல்ல என்னிடம் போதுமான அளவில் சொற்கள் இல்லை.தேடிக் கண்டு அகப்பட்ட சில சொற்களால் மட்டும் போற்றி உன்னை ஆராதிக்கிறேன்.என் கரங்கள் உன் திசை நோக்கித் தொழுகின்றன.என் விழிகள் உன்னை அர்சிக்கத் தேடுகின்றனஅவைகள் தீர்த்தம் நிரப்பிக்கொண்டு காத்துக்கிடக்கின்றன.என் இதழ்கள் உன் புகழ் பாடுகின்றன.இந்தப் பூஜை வேண்டுதலை ஏற்றுக்கொள்ள பள்ளியில் வீற்றிருக்க வேண்டுகிறேன்.

நன்றி!

இப்படிக்கு
உன் அன்பின் மலர் கமலம்.”

பிறவிக்குருடன் பார்வை பெற்றார்ப்போல் ஆனந்தக் கூத்தாடினான் ராஜா.அக்கடிதத்தை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ஜன்னலைப்பார்க்கிறான் ராஜா.அங்கே முல்லைத் தோட்டமாய் கமலாவின் காட்சி.நாடு மக்களாட்சி மலர்ந்த நாளில் நிறைந்த மலர்ச்சி.

“ராஜா”அன்புத்தாயின் அழைப்பு.”பள்ளிக்கூடம் போக நேரம் ஆகலையா?”

“இதோ வாரேம்மா” கடிதத்தை பூப்போன்று இதமாக மடித்து தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.

“ஆமா அங்க என்னடா பண்ற”

(தொடரும்}.


கொ`பெ`பி`அய்யா.
 

Saturday, 8 March 2014

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 16

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.16

அத்தியாயம் 16

ஆசிரியர் சமயோசிதமாக இடம் பார்த்து நச்சுன்னு ஒரு கேள்வியை நறுக்குன்னு வைத்தார்.இவர் போட்ட கிடுக்குப்பிடியில் மாட்டிக்கொண்டவர் தாயாரின் முகத்தைப்பார்த்து,”இதற்கு நான் என்னம்மா பதில் சொல்வதுஎன்பது போல் விழித்தார்.தன் தாயாரின் எதிர்வினை இதற்கு எப்படி இருக்குமோ எனும் அச்சமும் அவர் முகத்தில் இழையோடியது.தலைமை ஆசிரியர் கமலாவின் தந்தையார் என்ன சொல்லுவார் எனவும் ஆர்வத்தோடு அவர் கண்களின் பரிதவிப்பைக் கண்டு எதிர்கொண்டு காத்திருந்தார்..
உடனே கமலாவின் தந்தை சுதாரித்துக்கொண்டு ஆசிரியரின் கேள்வியைப் புரிந்து கொண்டவராய்க் காட்டிக்கொண்டு.நமட்டுச்சிரிப்பு ஒன்றை உதட்டிலேயே சிரித்து அடடே இவரிடம் மாட்டிக்கொண்டு விட்டோமே.பாதகமான பதில் சொன்னால் நமது பகல் வேசம் பல்லிளித்துவிடுமேஎன தன் மனதில் எண்ணிக்கொண்டு 
அய்யா நீங்க என்ன கேக்க வாரீங்கன்னு எனக்கு நல்லாவே புரியிது..கமலாவை ஏங் பள்ளிக்கு இன்னும் அனுப்பாம வச்சுரிக்கீகன்னுதான கேக்குறீக/.சமூக சித்தாந்தவாதிகளான பெரியார் பாரதியார் மற்றும் வள்ளலாரைப் பற்றி புரிந்துவைத்துள்ள இவர் ஏன் இப்படிப் பிற்போக்கு வாதியா இருக்குறாரேன்னு என்னுடைய கொள்கைய நீங்க சந்தேகப்பட்டுக் கேக்குறீகன்னு எனக்குப் புரிஞ்சிருச்சு.எனும் அப்பெரியவரின் மறுமொழி கேட்ட தலைமை ஆசிரியர் ,”ஆமா அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்களேன்எனத்தனது தெளிவான கண்ணொளியில் மௌனமான சிரிப்போடு ஆமோதித்தார்.
‘”அனுப்பத்தான் இருக்கிறோம் அய்யா அதில் என்ன சந்தேகம் உங்களுக்குஎன அமைதியாகக் கூறி ஆசிரியரின் வெற்றி முத்தைப்பார்த்துப் புன்னகைக்கிறார் கமலாவின் அப்பா.இந்த சொற்கள் ஆசிரியரின் செவிகளில் ஆயிரம் குடங்கள் தேன்நிரப்பிக் கொட்டியதுபோல் இனித்தது.அவர்கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.கலிங்கப்போரில் வென்ற அசோகரைப்போல் ஆனந்தம் கொண்ட அதே வேளையில் தோற்றுத் தலை தாழ்ந்த கமலாவின் அப்பாவின் முகம் கண்டும் தன் வெற்றியை அமைதியாக சுவைத்துக்கொண்டு அப்பெரியவரின் கைகளைப் பற்றி ,”மிக்க நன்றி அய்யாஎனக்கூறி தன் கண்களில் ஆனந்தக்கண்ணீரை உதிர்க்கும் முன் தன் கைத்துணியால் அவசரமாகத் துடைத்துக்கொண்டார்..ஆனால் அப்போது ஆச்சியின் முகத்தில் கடுகு வெடிக்கும் எரிச்சல்கொடூரமாக இருந்தது.அதையும் ஆசிரியர் கவனிக்கிறார்.ஆனால் ஆச்சியின் முயற்சிகள் இனி பலிக்காது எனத தெளிவடைந்தார்.இருந்தாலும் உறுதி செய்துகொள்ளும் விதத்தில்.எப்போது அனுப்பலாம் என்று எண்ணுகிறீர்கள்.எனக்கேட்டார்.
வரும் திங்கள் கிழமை அனுப்பி வைக்கிறேன்.இப்போ உங்களுக்கு திருப்தியா:என மீண்டும் இனிப்பைத் தந்தார் மிக்க மகிழ்ச்சி அய்யா.அப்போ நான் வரட்டுங்களா?......சரி.கமலாவிடம் கூற வேண்டுமே!....கமலா”!என வெற்றிசங்கம் முழங்குவதுபோல் ஆனந்த் தொணியில் அழைத்தார்.
கமலா மகிழ்ச்சி வெள்ளப்பெருக்கு மடை உடைத்துத் துள்ளி வருவதுபோல் குடுகுடுவென ஓடோடி வந்து தன் தலைமை ஆசிரியரின் கால்களில் விழுந்து நன்றிக்காணிக்கையாய் கண்ணீர் முத்துக்களைக் கொட்டி அர்ச்சிக்கிறாள்..உடனே ஆசிரியர் தன் இருகரங்களாலும் அவளை அரவணைத்துத் தூக்கி அவள் கண்களை தன் விரல்களால் தட்டிவிடுகிறார்.
இப்போ உனக்கு சந்தோசம்தானே.இன்னும் இரண்டே இரண்டு தினங்கள்தான்.திங்கள் கிழமை முதல் மீண்டும் என் வகுப்பறையில் .கலகலக்ச்செய்யப் போகிறாய்..சரி நான் வரட்டுமா?’என கங்கை கொண்ட சோழனாய் பெருமிதத்தோடு வந்த வினை முடித்து நகர்ந்தார்.அப்போது தன் இரு கைகளை கூப்பி வணங்கி வாழ வைத்த வள்ளலை வாழ்த்தி நின்றாள்.
ஆசிரியர் எப்போது வெளியே செல்வார் எனக் காத்துக் கொண்டிருந்த ஆச்சி தன் ஆட்டத்தைத் துவங்கினாள்.பொட்டப்புள்ளைக்கு எதுக்குப் படிப்பு மண்ணாங்கட்டி.இவ என்ன படிச்சுக் கலக்டர் வேலைக்கா போகபோறா?.
அடுப்பு ஊதப்போற கழுதைக்கு இம்புட்டுப்படிச்சது போதாதாக்கும்.அதெல்லாம் பள்ளிக்கூடமெல்லாம் போனதும் போதும்என தன் வசனத்தைப் பேசித் தீர்த்தாள்.
இதுவரை அமைதியாக பொறுமையோடு பொறுத்திருந்த கமலா இப்போது பொங்கி எழுந்தாள்.ஏய் கெழவி என்ன ஓவராப் பேசுற படிப்புங்குறது என்னோட சொந்த வாழ்க்கைப் பிரச்சன.அது வேணுமா வேண்டாமான்னு நான்தான் முடிவு எடுக்கணும்.உன்னோட முடிவு எனக்குத் தேவ இல்ல புரிஞ்சுதா?இன்னுமே என்னோட வாழ்க்கையில வெளயாண்ட அப்புறம் நாங் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.ஜாக்கிரத.எனத் தன் உணர்வுகளைக் கொட்டினாள் கமலா.
என்னடி பெரியவங்கள மரியாத இல்லாமப் பேசுற. இந்த வீட்ல நாந்தாங் பெரிய மனுசி.அதனால நாங் என்ன நெனக்கிரேனோ அதாங் நடக்கும்.என தன் வழக்கமான பழைய மடமையில் பேசினாள் ஆச்சி.
என்னது பெரிய மனுசியா?யாரு நீ பெரிய மன்சியா?நல்லது செஞ்சா நீ பெரிய மனுசி.ஆனா நீ நயவஞ்சகி.என்னோட எதிகாலத்தக் கெடுக்க நெனக்கிற நீ பெரிய மனுசியா?பெரிய் மனுசின்னா புள்ளங்கள படிக்க வச்சு அழகு பாக்கணும்.ஆனா நீ என்னப் படிக்கவிடாமக் கெடுத்துக் குட்டிச்சுவரா ஆக்கப் பாக்குறயே !நீயெல்லாம் நல்ல சாவே சாக மாட்ட. புழுத்துப் புண்ணாகி நாறி நாத்தமெடுத்துச் செத்து நரகத்துக்குத்தான் போவ சண்டாளி..இது பழைய பைத்தியக்காரக் காலமுன்னு எண்ணாத!இது பாரதி பெரியார் கண்ட புதுஉலகம்.
எங்களுக்கும் அவங்க எப்படிப் பேசனுமுன்னு சொல்லிக் குடுத்துருக்காங்க.இன்னுமே எல்லாம் பொண்ணுங்களப் பூட்டி வச்சி அடிமையாக்கனுமுன்னு நெனச்சா அது நடக்காது..
பொம்பளைங்களும் உசுருள்ள ஜீவன்கள்தான்.அவங்களுக்கும்.உசுரு இருக்கு உணர்வு இருக்கு.அவங்களுக்கும் சுயமா சிந்திக்குற அறிவு இருக்கு.பொம்பளைங்கன்னா அடுப்புலகிடந்து சாவுரதுக்கும்.கோலம் போடுறதுக்கும்,புள்ளயப்பெத்துக்குடுக்குரதுக்கும் மாத்திரமுன்னு நெனைக்காத.அது உன்னோட அந்தக் காலம்.இந்தக்காலம் பொம்பளைங்க ராக்கெட்டுல பறக்குற காலம்..துப்பாக்கி எடுத்து எல்லையில நின்னு சண்ட செய்யிற காலம்.ஆம்பளைங்க செய்யிற எல்லா வேலையும் பொம்பளைங்களும் செய்வாங்க.புரிஞ்சதா?இன்னுமே ஏதாவது இப்படி முட்டாத்தனமா பேசுனே நானே கல்லத் தூக்கிப்போட்டுக். கொன்னுருவேங் ஜாக்கிரத.என ஆவேசமாகக் கொந்தளித்தாள் கமலா.
ஓகோ அப்படின்னா அந்தப் பயலுக்குக் கல்லத்தூக்கிப் போடச்சொல்லி நீதாங் சொல்லிக்குடுதையா?”என பேச்சை திசை மாற்றினாள் ஆச்சி.
அதுவரை தன் மகளின் அறிவார்த்தமான பெண்ணுணர்வின் எழுச்சி முழக்கங்களை வியப்போடு ஆர்வமாகக் கவனித்துக்கொண்டிருந்த தந்தை தன் மகளைப்பற்றித் தாழ்த்திப் பேசுவது தாயே ஆனாலும் பொறுத்துக்கொள்ளமுடியாதவராய்  திடீரென் குறுக்கிட்டு அம்மா என்ன நீ பேசுற.!பொம்பளப் புள்ளைகிட்ட என்ன பேசுறேங்கிறத தெரிஞ்சுதாங் பேசுறையாஎனத்தன் தாய்க்கு எதிராக நியாயமான திசையில் பேசத் துவங்கினார்.
ஏண்டா அவ இவ்வளவு நேரமும் என்ன பேச்சுப் பேசுனா.அப்பெல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்துட்டு. இப்பக் கொந்தளிக்கிற.அவள நீ ஒரு வார்த்தையாவது கண்டிச்சியா?”எனத் தன் மகனைத் துணைக்கிழுக்கும் முயற்சியில் இறங்கினாள் கெழவி.அவ தப்பா எதுவும் பேசலயே.அவ பாதிக்கபட்டவா அவளுக்கு வேகம் இருக்கத்தாங் செய்யும்.நீ இன்னும் பழைய காலத்தயே இன்னும் புடிச்சித் தொங்கிக்கிட்டு இருந்தையின்னா அதெல்லாம் இப்போ எடு படுமா..அவ படிக்கணுமுன்னு நெனக்கிறா.அத நெனச்சி நாம பெருமைப்படணும். இப்போ காலம் ரொம்ப மாறிப்போச்சும்மா.அதனால ஓங்க்காலத்த இன்னும் நினைக்கக்கூடாதும்மா.புள்ளைங்க என்ன ஆசப்படுதோ அத நிறவேத்தி வைக்கிறதுதாங் பெரியவங்க கடமை.அத ஏங் நீ புரிஞ்சிக்காம அடம் புடிக்கிற..உனக்கு வயசு ஆயிப்போச்சு.ஓங் காலமும் முடிஞ்சி போச்சு..அவங்க வாழ வேண்டிய வயசு.அதனால அவங்க வாழ்க்கையைப்பத்தி அவங்க கவலைப்ப்டுறதுக்கு அவங்களுக்கும் பொறுப்பு இருக்கும்மா.அவ படிக்கணுமுன்னு சொல்றவள்ட்ட நாம வேண்டாமுன்னு எப்படி சொல்லமுடியும்.இது அவங்க வாழ்க்கைப் பிரச்சன அதுல நாம ஒரு குறிப்பிட்ட எல்லைவரைக்கும்தான் தலையிட முடியும்.நாம அதையும் தாண்டி தலையிட்டா அப்புறம் நமக்குத்தான் மரியாத இருக்காது.ஏன்னா இப்போல்லாம் அவங்களுக்கு நால்லாவே அறிவுபூர்வமா யோசிக்கதெரியுது.அத நாமதான் புரிஞ்சிக்கணும். அவங்க அவங்க எதிர் காலத்தப்பத்தி அவங்க அவங்களுக்கு அக்கறை இருக்குது நாயம்தானம்மா..அவ படிக்க போகட்டும்.வீணாத் தடுத்துக் கடைசிக் காலத்துல பாவப்பழியச்சுமக்காத.உனக்கு ஆசையா என்ன வேணுமோ அத மாத்திரம் என்கிட்டக்கேளு.அதுல ஏதாவது குறை இருந்தாமட்டும் எங்கிட்ட சொல்லு. காலம் போற போக்க புரிஞ்சு நடந்துக்கோஎனத் தாயை சமாதானப்படுத்திவிட்டு. மகளை தன் நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டு,”.இனி நீதானம்மா எங்களுக்கு எல்லாம். ஆச்சி சொன்னதைய்ல்லாம் மனசுல வச்சுக்காத..போ....ஆமா சாப்புட்டயா நீ ........ஏம்மா சுப்பு கமலா சாபட்டாளா?எனக் கேட்கிறார் சாமிநாதன்.

இதுவரை மௌனமாக கவனித்துக் கொண்டிருந்த கமலாவின் தாயார் சுப்பு இப்போதுதான்.நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறாள்..கமலாவின் கல்விப்பயணம் தொடர்வதில் அவளுக்கும் மகிழ்ச்சிதான்..அவள் மகிழ்ச்சி பொங்கிய உற்சாகமான குரலில் கமலா!வாம்மா!வா!சாப்புடு.வா வா.சாப்பிட்டுட்டு ஓங் யூனிபாம் ட்ரெஸ் எல்லாம் துவைக்கனுமுல்ல`வா..வா.!

(தொடரும்)

கொ.பெ.பி.அய்யா.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGVe0g-fv7QQ7ld6DUbnLUk33Ru3Jbnx5LtJNwDhwnayRCly9_aHrXEogz2Do5TakNnxO7nrTjyy2Kpbq8xAYdL84rRbUAgFNci5Myhs5PeeijNZQfSr74PQplgXdX4hMuC1uH4HBupPs/s1600/unnamed+(14).jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*

Monday, 3 March 2014

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 15

 அத்தியாயம். 15

தலைமை ஆசிரிரியர் கமலா வீட்டிற்குள் வருகை தருகிறார்.கமாலாவின் தந்தை உரிய மரியாதையுடன் இரு கைகூப்பி வணங்கி வணக்கம் கூறி நாற்காலியில் அமர வேண்டுகிறார்.
அய்யா வணக்கம்! வாருங்கள்.உட்காருங்கள்!.ஏம்மா கமலா உங்க சார் வந்திருக்கார் பாரு.அப்படியே அய்யாவுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா!.இந்த வார்த்தைகைகளைக் கேட்டவுடன் கமலாவுக்கு மறுவாழ்வு கிடைக்கப்போகிறது என்பது போன்று பூரிப்பு.அவளுக்குள் ஏற்படுகிறது. ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

இதோ வாரேம்ப்பா!.என குடுகுடுவென ஓடுகிறாள் அலமாரியிலுள்ள புத்தம் புதிய பளபளக்கும் டம்லரைத்தேடி எடுக்கிறாள்.இருக்கிற பளபளப்பு போதாதென்று மேலும்மேலும் அதை நன்றாக துலக்கி சுத்தமாக குளிர்ந்த தெளிந்த நீரை முதலில் கொண்டு வரும்போதே மிகவும் பவ்வியமாக வணக்கம் சார்”!எனும் வணக்கம் கூறும் மொழியில் "என்னை இந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுங்கள்"எனக் கெஞ்சுவது போல் தன்னுடைய உள்ளுணர்வை அந்த ஒற்றைச்சொல்லில் மௌனமாக வெளிப்படுத்தினாள்.ஆசிரியர்கள் மாணவர்களின் உளவியல் கற்றவர்கள்.அந்த ஏக்கமான மௌனமொழியைப்பற்றிப் புரிந்துகொள்ள மாட்டார்களா என்ன.கமாலாவிடமிருந்து அந்தத் தண்ணீரை வாங்கும்போதுகவலைப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன் என ஆறுதல் சொல்வது போன்று ம்ம்ம்ம்.எப்படிம்மா இருக்க! கமலா!நல்லா இருக்கியா?என்றார். அந்த அன்பான மொழி அவள் செவிகளைத் தொட்ட தருணத்தில் கமலாவின் விழிகளில் பனித்துளிகள் போன்று சில துளிகள் துளிர்த்து மீள்கின்றன.சில சொட்டுகள் தரையில் பொட்டென உதிர்கின்றன.

கமலாவின் மனக்கவலையைப் புரிந்து கொண்டவராய் ,"சரிம்மா நீ உள்ளே போ நான் ஆச்சியைப்பற்றி அப்பாவிடம் விசாரிக்க வேண்டும்எனக் கூறி கவலைப்படாதே!நல்லதே நடக்கும் எனக் கண்சாடை செய்கிறார் பண்புள்ள தலைமை ஆசிரிரியர்.கமலா உள்ளே நகர்கிறாள்.
சரி சார் ஆச்சி எப்படி இருக்குறாங்க.பூரணமாக் குணமாயிட்டாங்களா?என ஆசிரியர் தன் பேச்சைத் சாதுர்யமாகத் துவக்கினார்.
.
பரவாயில்லை அய்யா.ஒண்ணும் பிரச்சனை இல்ல நல்லா சுகமாயிட்டாங்க..ஏதோ கடவுள் புண்ணியத்தில முழுசா குணமாகி வீட்டுக்குத் திரும்பி வந்துட்டாங்க..அய்யா! ஏங் வீடு தேடி வந்து விசாரிக்கிறது என்னுடைய பாக்கியம் அய்யா! என மீண்டும் நன்றி கூறும் விதமாக கைகூப்பி வணங்கினார்.

ஆச்சியைப் பாக்குற சாக்குல அப்படியே கமலாவையும் பாத்துக்கிட்டுப் போகலாமே!ஒரே கல்லுல ரெண்டு மாங்கா எப்படி?’எனும் நகைச்சுவையோடு பேச்சை லாவகமாக நகர்த்தினார்.

இருவரும் கொள்ளென மனம் விட்டுச்சிரித்தனர் கமலா எம்பொண்ணு மாதிரியாச்சே.அதுமாத்திரமல்ல அவா நல்லாப் படிக்கிற பொண்ணு.கமலா மேல எனக்குத்தனி அக்கறையுண்டு.அவள எப்போப் பாப்போம்ன்னு இருந்தது.இப்போ ஆச்சியால அந்த வாய்ப்புக்கிடைச்சது.விடுவேனா என்ன? இதுதான் நல்ல வாய்ப்புன்னு நினச்சேன் உடனே கெளம்பி வந்துட்டேன்.எப்படி சார்?”என நளினமாகப் பேசி கமலாவின் தந்தையின் எதிர் வினையைக் கவனிக்கிறார் தலைமை ஆசிரியர். அப்போது கமலாவின் தந்தையின் முகத்தில் ஈ ஆடவில்லை.அவருக்குள் ஏதோவொரு குற்ற உணர்வு அவரது முகப்பொலிவு மாறுவது ஆசிரியர்க்குப் புரிகிறது.அவருக்கு நம்பிக்கையும் வருகிறது.இந்தப் பழம் கனியும் என்றும் புரிகிறது.
மேலும் தான் குறி வைக்கும் இலக்கிற்கு எவ்விதம் காயை லாவகமாக நகர்த்தலாம் என்பதற்கும் அந்த வீட்டுக்குள்ளேயே தந்திரம் தேடி சுவர்களைச்சுற்றும் முற்றும் பார்க்கிறார்.சுவரிலே வள்ளலார் படமும்,பாரதியார் படமும் கூடவே காராஜரும் பெரியாரும் சேர்ந்து உரையாடுவது போன்ற படங்களும் ஆசிரியரின் கண்களுக்கு கலங்கரை விளக்கங்களாகக்  காட்சியளிப்பதோடு நன்னம்பிக்கை முனைகளாகவும் ஆசிரியர்க்கு வழிகாட்டிகளாவும் அப்படங்களில் உள்ள மகாத்மாக்கள் பிரகாசித்தார்கள்.அப்போது நல்லது நடக்கும் என்றும்.பெண்விடுதலையைப் பற்றி பேசவும் வந்த அந்த நல்ல உள்ளத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நாமும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கலாமா?அவர் எண்ணி வந்த வேலை எவ்வளவு சுலபமாகப் போகிறது என்பதை எண்ணித்துள்ளிய அவருடைய அந்த அன்பு மனம் எந்த அளவில் நம்பிக்கையோடு ஆனந்தக்கூத்தாடி களித்திருக்கும் என்பதை எண்ணி எண்ணி நாமும் அவரோடு களிநடனம் ஆடி மகிழ்வோமா?      ,

சரி களிநடனம் ஆடிக்கொண்டாடியது போதும் கதைக்கு வருவோம்.இப்போது மறு மலர்ச்சி பெற்றவராய் புத்துணர்வு பெற்ற புதுப்பொலிவுடன் அவர் நம்பிக்கை பெற்றார் என்பதை அவருடைய முகம் ஆயிரம் ஒளி சக்தி பெற்ற மின்விளக்காய் சொலித்தது.அப்போது அவர் பேச்சை மிகவும் மென்மையாக இதமாக கனிவாக மேலும் ஒரு புதிய கோணத்தில் திருப்புகிறார்.அப்போதுதான் அவர் கற்ற உளவியல் அவருக்குக் கைகொடுக்கிறது.
சார் இந்தப்படங்களில் உள்ளவர்கள் எல்லாம் உங்களுக்கு மிகவும் பிடிக்குமோ!என மல்லிகை அவில்வதுபோல் சொற்களை தன் அழகான பாணியில் இனிக்கும் விதமாகக் கேட்கிறார்.

அவரும் புன்சிரிப்போடுஆமாம் அய்யா அவர்கள்.அத்தனை பேருமே.என் மனதுக்கு மிகவும் பிடித்தவர்கள்..சுருங்கச்சொன்னால் நான் அவர்களின் தாசன்என்றார்.

உண்மையில் உங்கள நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையா இருக்கு.நீங்க எந்த அளவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பெரிய மனுசர் என்பது இந்தப் படங்களைப் பார்க்கும் போதே என்னால புரிஞ்சிக்கிட முடியிது.ஆகா எப்பேர்ப்பட்ட மகான்கள் இவர்கள்.இவர்கள் படங்களாக அல்ல நமக்குப் பாடங்களாக விளங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.எனப்புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தவர் திடீரென அவரைப்பார்த்து ஒரு கேள்வியைப் போட்டார்.

தங்களைப் பார்த்தால் பார்வைக்கு பக்திப்பழமாகத் தெரிகிறீர்கள்..............எனப் பேச்சை முடிக்கத் தயங்கி இழுத்தார்.ஆசிரியர்.

இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொண்ட கமலாவின் தந்தை.அய்யா நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு எனக்குத் தெளிவாவே புரியுது.பெரியார எப்படிப் புடிக்கும்முண்ணுதான கேக்கவர்றீங்க?

ஆமோதிப்பதுபோல் தலைமை ஆசிரியர் இதமாகத் தலை அசைத்தார்.

பொதுவாக சிலர் அப்படித்தான் சொல்றாங்க,பெரியார் ஒரு நாத்திகர் அவரை எப்படி ஆத்திகர்கள் நேசிக்கமுடியும்முன்னு.அவர்கள் அவரை புரிந்து கொண்டவிதம்.அவ்வளவுதான்.அவரை பற்றி யாரும் இன்னமும் சரியான விளக்கம் தர முயற்சிக்கவில்லை என்பதே என்னுடைய ஆதங்கம்.என்னைப்பொறுத்தவரை நாத்திகம் என்பது ஆத்திகத்திற்கு எதிரான ஒன்றல்ல.ஒரு மார்க்கத்தை சீர் படுத்த முயன்ற ஒரு புதிய மார்க்கம்தான் நாத்திகம் என்பதே என்னுடைய வாதம்.ஆரம்ப காலத்தில் இத்தனை மதங்கள் இருந்தனவா?இல்லையே!ஒன்றை சீர் செய்ய மற்றொன்றாகத் தோன்றியவைகள்தான் இன்று இத்தனை மதங்களும்.அப்படித்தான்இதுவும். இந்து மதச் சீர்திருத்தவாதிகளாக ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள்.யூத மதத்தின் மறு மலர்ச்சியாக கிறித்தவம்.அதில் ஏசுபிரான் மற்றும் சீசர்கள்.இஸ்லாமில் சூபிக்கள் எல்லோருமே!.அப்படியானால் இவர்கள் எல்லாம் நாத்திகவாதிகளா?அதனால்தான் சொல்றேன்.பெரியாரும் ஒரு சீர்திருத்தவதின்னு ஏங் ஒப்புக்கொள்ள மறுக்கிராங்கன்னுதான் எனக்கு வெளங்கல்ல.
பெரியார் என்ன சொல்றார்.மக்களுக்கு வாழ்க்கைக்கு பயன்படுறதச்சொல்லுங்க மத்தது தேவை இல்லாம எதுக்குண்ணு கேக்குறாரு இது தப்பா?.பாரதியார் வள்ளலார் போன்றோரெல்லாம் என்ன சொன்னாக உண்மை எதுவோ அதைப்போற்றுங்கள்.மெய்யை மாத்திரம் வழிபடுங்கள்.நிசம் எதுவோ அதை நம்புங்கள்.யாரும் யாருக்கும் எஜமானர் அல்ல.அனைவரையும் சமமாகக் காணுங்கள்.மடமைகளை விட்டொழியுங்கள்.அப்படித்தான அவங்க சொன்னாங்க. .அதையேதான இவரும் சொன்னாரு.இதுல என்னொரு வித்தியாசம்ன்னா அவங்க பாட்டாப்படி கொஞ்சம் பதமாச்சொன்னாங்க.இவரு கொஞ்சம் கோவக்காரரு வெடுக்குன்னு வெள்ளையா புரியும்படியா கடுமையாச்சாடிட்டாரு.எதுக்கு அந்தக்கோவம்?.அவுரு வீட்டுக்கு அரிசி அறிக்கலயின்னா?எல்லாம் நாமஎல்லாம் நல்லா சுயமரியாதையோட வாழணும்னுதான அப்படிச்சொன்னாரு.ஒரு பழமொழி சொல்லுவாங்களே! எதுக்கோ எதோடயோ கோவிச்சிட்டுப்போற மாதிரின்னு.அப்படிகோவிச்சுக்கிட்டா யாருக்குநட்டம்?அய்யா ரொம்பப் படிச்சவுக உங்ககிட்ட நான் கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாப் பேசிட்டனோ!பௌவியமாக இறங்கிக் கொண்டார்.

அப்பப்பா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையாச்சொல்லி இருக்கீங்க.உண்மையாச்சொல்ரேன்.எனக்கே சிலவிசயங்கள் இன்னைக்குத்தான் புரிஞ்சது.எவ்வளவு உண்மைகளைப் புரிஞ்சி வச்சிருக்கீங்க..உண்மையிலேயே நான் அசந்து போயிட்டேன் போங்க.ன்னு அவரை பாராட்டிவிட்டு தன் இலக்கைத் தொடுகிறார் தலைமை ஆசிரியர்.
சார் பெண் கல்வியைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
(தொடரும்)

கொ.பெ.பி.அய்யா.      .https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3alVbKH_VNQwc13wQ7kUZAcnim3YPgFPeFfIkra0LyhDCFvobm6k6eBrYCPEf47WuEneuVdstW1MGKYXpImomFqOpWCthG0NZiAOxTVhSct_JhTLe1GUIJG6KcusX_zgUy1vSwNB3em0/s1600/unnamed+(7).jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*